ஆங்கில மொழியைத் இணையத்தில் தெளிவாக கற்க
ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது.
வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அனைவரும் கற்றிருந்தாலும், அயல் மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு இருக்குமோ என்ற அச்சம் கூடவே இருக்கிறது. இவர்களுக்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளம் உள்ள இணைய முகவரி http://world-english.org/ முதலாவதாக, இதில் ஆங்கில மொழியினை நன்றாகப் பேச மற்றும் எழுத 500 சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதே போல 100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன. எவ்வளவு கவனம் எடுத்தாலும், பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள் தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும், தேர்வும் கிடைக்கிறது. எதிர்ப்பதங்களும் ஒத்த பொருள் தரும் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கில மொழி இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும் தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு மூலமாகவும் இவற்றைக் கற்றுக் கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள், வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை சோதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம் சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் தங்களுக்கானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம். Six sick hicks nick six slick bricks with picks and sticks என்று சொல்லிப் பாருங்கள். என்ன நாக்கு சுழல்கிறதா? ஆங்கிலம் தடுமாறுகிறதா? நீங்கள் பயிற்சி பெறுவதற்கு இதே போல பல வாக்கியங்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. நீங்கள் நன்றாக ஆங்கில மொழியினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும், உங்கள் அளவில் மேற்கொள்ளவும் சோதனைத் தேர்வுகள் உள்ளன. IELTS எனப்படும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்கான அத்தியாவசியமான தேர்வு குறித்த தகவல்களும் இணைய தள முகவரிகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தில் சென்று நம் மின்னஞ்சல் முகவரியினைப் பதிந்து கொண்டால் இலவசமாக இந்த தளம் வழங்கும் ஆங்கில மொழி குறித்த இமெயில் செய்தித்தாள் நமக்கு அனுப்பப் படும். | ||
அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்நாடு விதிகள் (15-பி) திருத்தம் மேற்கொண்டு - அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு | ||
சி.ஏ., - சி.டபிள்யூ.ஏ., - சி.எஸ்., பட்டங்கள்: டில்லி மாணவி சாதனை
டில்லியைச் சேர்ந்த மாணவி, 23 வயதிலேயே, சி.ஏ., - சி.எஸ்., - சி.டபிள்யூ.ஏ., என, கணக்கியல் தொடர்பான, மூன்று பட்டங்களில், தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இளம் வயதில், இந்த மூன்று படிப்புகளில் தேர்ச்சி பெறுவது என்பது, மிகவும் கடினமான விஷயம். இதையடுத்து, நாடு முழுவதிலுமிருந்து, அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இதுகுறித்து பல்லவி கூறியதாவது: பாடங்களை மனப்பாடம் செய்வதை தவிர்த்து, புரிந்து படித்ததே, என் வெற்றிக்கு காரணம். சர்வதேச நிதி நிறுவனத்தில் பணியாற்றுவதே, என் கனவு. தற்போது, சர்வதேச நிதி நிறுவனம் ஒன்றிடமிருந்து, எனக்கு அழைப்பு வந்துள்ளதன் மூலம், என் கனவு நிறைவேறியுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைவர், சாந்தா கோச்சார் தான், என் ரோல் மாடல். அவரைப் பார்த்து, பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இவ்வாறு, பல்லவி கூறினார்.
| ||
தமிழகத்தில் உள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வருகிற 3 ந்தேதி திறக்கபடும்
| ||
ஏப்ரல் -1 முட்டாள் தினமாக உருவான கதை!
ஏப்ரல்-1... உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் கொண்டாடுகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) காலையிலேயே உங்களை ஏதாவது சொல்லி ஏமாற்றப்பார்ப்பார்கள். சிலர் சொல்லும் டுபாக்கூர் தகவல்கள் 100 சதவீதம் அப்படியே உண்மை தான் என்று நம்பும்படி இருக்கும். எனவே நம்பி, ஏமாந்து விடாதீர்கள்.
சமீப காலமாக, இ-மெயில், எஸ்.எம்.எஸ். மற்றும் இணையத்தளங்கள் மூலமாகவும் ஏப்ரல் 1-ந் தேதி அன்று வதந்திகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். ஆகையால் உஷாராக இருப்பது நல்லது. இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாத போதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.
16-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல்-1 லேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562-ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13-வது கிரகரி பழைய ஜூலியன் ஆண்டுக்கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப் படுத்தினார்.
இதன்படி ஜனவரி 1 அன்று தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்த புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1582-ம் ஆண்டிலும், ஸ்காட்லாந்து 1660-ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700-ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ம் ஆண்டிலும், இந்த புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டன.
ஆனால் பல ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் காலனி நாடுகளும் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர்.
அத்தோடு நில்லாமல், ஏப்ரல் -1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளை சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர். இது தான் காலப்போக்கில் ஏப்ரல் -1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைபிடித்ததாக வரலாறு கூறுகிறது.
1508-ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதே போல் டச்சு மொழியிலும் 1539-ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றி சொல்லப்பட்டிருப்பதை அறியக்கூடியதாக உள்ளது. 1466-ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
| ||
அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்
அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என மூன்று வகையாக பள்ளிகள் செயல்படுகிறது. அரசு பள்ளிகளுக்கு அரசு அனைத்து விதமான கட்டுமான வசதி, அடிப்படை வசதிகளை செய்கிறது.
2007ம் ஆண்டு வரை அந்தந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள விகிதத்திலிருந்து ஒரு சதவிகிதம் பராமரிப்பு தொகை வழங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக பராமரிப்பு தொகையும் வழங்கப்படாததால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர்,கழிப்பறை,காற்றோட்டமான வகுப்பறை வசதிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பள்ளிகள் உள்ள இடத்தில் அரசு பள்ளிகளும் தொடங்கப்படாததால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் படிப்பதை கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
| ||
பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்று கொடுங்கள்: சசி தரூர் "அட்வைஸ்"
"இன்றைய நவீன உலகில், வெற்றி பெற வேண்டுமானால், ஆங்கிலம் படிப்பது மிகவும் அவசியம். இளம் தலைமுறைக்கு, ஆங்கிலம் கற்றுக் கொடுக்கவில்லை என்றால், அவர்களின் எதிர்காலம், பாதிக்கப்படும்" என, மத்திய மனிதவளத் துறை இணை அமைச்சர், சசி தரூர் கூறியுள்ளார்.
உலகம் மிகவும் மாறி விட்டது. பல புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, நம்மை தயார் படுத்த வேண்டியது அவசியம். இன்றைய நவீன உலகில், வெற்றி பெற வேண்டுமெனில், ஆங்கிலம் படிப்பது மிகவும் அவசியம்.
நம் குழந்தைகளுக்கு, கட்டாயமாக ஆங்கிலம் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க மறுத்தால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அதற்கு, நாமே காரணமாக இருந்து விடக் கூடாது.
கேரளாவைச் சேர்ந்தவர்கள், மலையாளத்துக்கு முன்னுரிமை கொடுத்தாலும், ஆங்கிலத்தை தவிர்க்க கூடாது. ஆங்கிலம் கற்பது, பொருளாதார, சமுதாய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கேரளாவில், போதிய வேலை வாய்ப்புகள் இல்லை.
இதனால் கேரள மக்கள், உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் வேலை தேடிச் செல்கின்றனர். தமிழர்கள், பீகாரைச் சேர்ந்தவர்களை விட, நமக்கு, ஆங்கிலம் மிகவும் முக்கியம். கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டேன். தேர்தல் பிரசாரம் முழுவதும், ஆங்கிலத்தில் தான் பேசினேன். இதனால், எனக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை எழுப்பினர். ஆனாலும், அந்த தேர்தலில் வெற்றி பெற்றேன்.
இவ்வாறு, சசி தரூர் பேசினார்.
| ||
பள்ளிகளில் அடிப்படை வசதி அரசு காலக்கெடு இன்று முடிவு : 1000 பள்ளிகள் கதி என்ன?
அடிப்படை வசதிகளை இதுவரை பூர்த்தி செய்யாத 1000 தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் இயங்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மாநகர எல்லை எனில் 6 கிரவுண்டு நிலத்தில் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும். டவுன் பஞ்சாயத்து எனில் ஒரு ஏக்கர் நிலத்திலும், கிராம பஞ்சாயத்து எனில் 3 ஏக்கர் நிலத்திலும் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும். மாணவ, மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறை, விளையாட்டு மைதானம், ஆசிரியர் மாணவர் விகித அடிப்படையில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இருத்தல் வேண்டும் என்று அனைவருக்கும் கட்டாய கல்வி மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு உத்தரவிட்டது.
இந்த அடிப்படை வசதிகளை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் கட்டாயமாக செய்ய வேண்டும். தவறினால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அதற்கான காலக்கெடு மார்ச் 31 என்றும் அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாத பள்ளிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு மார்ச் 31ம் தேதிக்குள் வசதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. ஆனால், 1000 தனியார், மெட்ரிக் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. கல்வித் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த பள்ளிகள் வரும் கல்வியாண்டில் இயங்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஏனெனில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பை பூர்த்தி செய்யவில்லை எனில், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1 லட்சம் அபராதம், அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே இன்று வரை அடிப்படை கட்டமைப்பை பூர்த்தி செய்யாத பள்ளிகள் மீது இந்த நடவடிக்கை பாயும் என்பதால் ஆயிரம் பள்ளிகள் இயங்குமா, அதில் தற்போது பயின்று வரும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
| ||
கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்
அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர் ஒருவர், ஊர் ஊராக சென்று, பொது மக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டு நன்கொடை சேகரிக்கிறார்.
சபாரி உடை அணிந்து பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்ட அவர், "நான் உங்கள் செருப்புகளை துடைக்கிறேன். நீங்கள் ஏழை குழந்தைகளின் கண்ணீரை துடையுங்கள்" என்ற வாசகம் அடங்கிய பேனரை வைத்திருந்தார்.
குழந்தைகளின் கல்வி கண் திறக்க நிதி சேகரிப்பது பற்றி அவர் கூறியதாவது: சிறு வயதிலிருந்தே, மற்றவர்களுக்கு உதவ வேண்டும், என்ற எண்ணம் எனக்கு உண்டு. சென்னை லயோலா கல்லூரியில், பி.ஏ., தமிழ் படித்த போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதற்காக, பகுதி நேரமாக வேலைகள் பார்த்தேன்.
கேட்டரிங் முதல், கவுரவ ஆசிரியர் பணி என, இருபதுக்கும் மேற்பட்ட பணிகளை பகுதி நேரமாக செய்து, மூன்று சக்கரசைக்கிள், செயற்கை கால் போன்றவற்றை வாங்கி, உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வழங்கினேன்.
கடந்த, 1998 முதல், 2004ம் ஆண்டு வரை, மாற்றுத்திறனாளிக்கான சேவை செய்தேன். அப்போது, ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கும், சிறப்பான கல்வி கொடுக்க வேண்டும், என்ற எண்ணம் மேலோங்கியது.
அதையடுத்து, பாடியநல்லூர் மருதுபாண்டியர் நகரிலிருந்த என் தந்தையின் நிலத்தில், கருணைக் கரங்கள் மற்றும் பள்ளியை துவக்கினேன். தற்போது, ப்ரீ கேஜி முதல், ஐந்தாவது வகுப்பு வரை, 170 ஆதரவற்ற, அனாதை குழந்தைகள் படிக்கின்றனர்.
பள்ளியில் பணிபுரியும், எட்டு ஆசிரியர்களுக்கு சம்பளம், மின் கட்டணம், பராமரிப்புச் செலவு என, மாதந்தோறும், 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. நன்கொடை என்று பிரபலங்களிடம் கையேந்துவதை விட, பொதுமக்களின் பங்களிப்பை பயன்படுத்த வேண்டும், என்று நினைக்கிறேன்.அதனால் தான், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமர்ந்து, அவர்களின் ஷூ, செருப்புகளை பாலிஷ் செய்து, நன்கொடை வசூலிக்கிறேன்.
பாலிஷ் செய்வதற்கு, பொதுமக்கள் கொடுப்பதை வாங்கிகொள்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார். அவருடைய உதவும் எண்ணத்துக்கும், உறுதுணையாக இருக்க நினைப்பவர்கள், 98848 69566 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
|
RESOURCES
▼
No comments:
Post a Comment