Saturday, March 8, 2014

நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி, 10% அகவிலைப்படி வழங்குவதிலும் தாமதம்

தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயிலிருந்து, அரசு ஊழியர் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில அரசு, அறிவிக்கும்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், முன்னதாகவே, மத்திய அரசு, கடந்த, 1ம் தேதி, அதன் ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை, 10 சதவீதம் உயர்த்தி அறிவித்தது; ஆனால், தமிழக அரசு, இதுவரை அறிவிக்கவில்லை.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்தபடியாக, இலவச திட்டங்களுக்கு அதிகளவில் செலவு செய்கிறது. இதனால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக, கடந்த ஆண்டு, 35 லட்சம், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, 600 கோடி ரூபாயும், கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளுக்கு, 320 கோடி ரூபாயும் வழங்காமல், நிலுவை உள்ளது. இதேபோல், பல திட்டங்களுக்கும், நிதி ஒதுக்கவில்லை என, கூறப்படுகிறது.இதனால் தான், 'மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த பின்பும், தமிழக அரசு, அறிவிக்கவில்லை' என, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

அரசு, கருவூலத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வரும் மாதங்களில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, 'லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழக அரசு, அகவிலைப்படியை உயர்த்தி வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு கஜானாவில், நிதி இல்லாதது தான் இதற்கு காரணம். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, அகவிலைப்படி உயர்வை அறிவித்தால், ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் அளவில், தமிழக அரசு நிதி திரட்ட வேண்டும். அதற்கு, என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை' என்றார்.
லோக்சபா தேர்தல் எதிரொலி: சி.பி.எஸ்.இ., தேர்வில் மாற்றம்

லோக்சபா தேர்தல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது; சில பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, ஏப்ரல், 9, 10, 12, 17ம் தேதிகளில் நடைபெற இருந்த, சில பாடங்களின் தேர்வுகள், முறையே, ஏப்ரல், 19, 21, 22, 25 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிகளில் நாளை சிறப்பு முகாம்: பெயர் சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு

வாக்காளர் பட்டியலில், இதுவரை பெயர் சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு, நாளை அளிக்கப்படுகிறது. இதற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.


ஓட்டுப் பதிவு:

லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு, அடுத்த மாதம், 7ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், அடுத்த மாதம் ஒட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, கடைசி வாய்ப்பாக, நாளை சிறப்பு முகாம், தமிழகம் உட்பட நாடு முழுவதும் நடக்கிறது.இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்காக, அனைத்து ஓட்டுச்சாவடிகளில், நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஓட்டுச்சாவடி மையத்தில், வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படுவதுடன், அங்கு பணியிலிருக்கும் அலுவலர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு படித்துக்காட்டுவர். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலும், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

'ட்விட்டரில்':

பெயர் விடுபட்டவர்கள் படிவம், '6' ஐ பூர்த்தி செய்து, வயது மற்றும் இருப்பிட சான்றுகளை அளிக்கலாம். இந்த முகாமில், பட்டியலில் பெயர் மட்டும் சேர்க்கப்படும். நீக்கம், திருத்தம் செய்யப்பட மாட்டாது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, 'ட்விட்டர்' சமூக வலைதளத்தில் விடுத்த வேண்டுகோளில், 'அனைவரும் ஓட்டளிக்க வசதி யாக, பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு, பதிவு செய்து கொள்ள வேண்டும்' என, கோரியுள்ளார்.
பட்டியலை சரி பார்க்க இறுதி வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்குகிறது. இதனால், சில மாதங்களுக்கு முன்பே, தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பதிவு எண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை, பெயர் பட்டியலுக்காக தயார் செய்து, தேர்வுத் துறைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இறுதியாக, மாணவர்களின் பெயர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை மீண்டும் சரி பார்க்க, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை யாசிரியர்கள்,'ஆன்லைனில்'இந்த பட்டியலை சரி பார்த்து, இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால், இன்று(மார்ச் 8) சரி செய்து கொள்ளலாம், என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
TRB - PG சார்ந்த வழக்குகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு


சென்னை உயர்நீதிமன்றத்தில் (07.03.14) விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றிருந்த TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252
SCHOOL EDUCATION வழக்குகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து நீதியர்சர் உத்தரவிட்டார்.
எந்தெந்த நாட்டில் எவ்வளவு செலவாகும் - தெரியுமா உங்களுக்கு?

வெளிநாட்டில் படிக்கச் செல்வோர், ஒரு குறிப்பிட்ட நாட்டில் கல்விக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத் தாண்டி, அவர் அங்கே படிக்கும் காலம் வரையான இதர செலவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

அதைப் பொறுத்தே, ஒருவரால் தனது வெளிநாட்டு கல்வி செலவை சமாளிக்க முடியுமா? என்பதை திட்டமிட முடியும். சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாமல் வெளிநாடு சென்றால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மாணவருக்கு எந்தளவு செலவாகும் என்பதைப் பற்றிய விபரங்கள் இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா

இந்நாட்டில் படிக்கும் ஒரு வெளிநாட்டு மாணவருக்கு, ஒரு ஆண்டிற்கு சராசரியாக ஆகும் வாழ்க்கைச் செலவு 14,148 ஆஸ்திரேலிய டாலர்கள். ஒரு வெளிநாட்டு மாணவருக்கு, ஒரு வாரத்திற்கான தங்குமிடச் செலவு (அவர் வசிக்கும் இடத்தைப் பொறுத்து) 70 ஆஸ்திரேலிய டாலர் முதல 400 ஆஸ்திரேலிய டாலர்கள் வரை ஆகிறது.

ஒரு வாரத்திற்கான இதர வகை செலவின விபரங்கள் பின்வருமாறு,

மளிகைச் சாமான்கள் மற்றும் வெளியில் சாப்பிடுதல் - 80 முதல் 200 ஆஸ்திரேலிய டாலர்கள்

கேஸ் மற்றும் மின்சாரம் - 60 முதல் 100 ஆஸ்திரேலிய டாலர்கள்

போன் மற்றும் இணையதளம் - 20 முதல் 50 ஆஸ்திரேலிய டாலர்கள்

பொது போக்குவரத்து - 10 முதல் 50 ஆஸ்திரேலிய டாலர்கள்

பொழுதுபோக்கு - 50 முதல் 100 ஆஸ்திரேலிய டாலர்கள்

கனடா

ஒரு ஆண்டிற்கு ஏறக்குறைய 10,000 முதல் 12,000 கனடா டாலர்கள் வரை செலவாகிறது. தங்குமிடச் செலவு, உணவு, போக்குவரத்து, மருத்துவக் காப்பீடு, புத்தகங்கள் மற்றும் துணிமணிகள் வாங்குதல் உள்ளிட்டவை மேற்கண்ட செலவினத்தில் அடக்கம். ஒரு வெளிநாட்டு மாணவரின் வாழ்க்கை முறையைப் பொறுத்து, அவருக்கான செலவினங்கள் கனடாவில் மாறுபடும்.

சீனா

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, சீனாவில் வாழ்க்கைச் செலவினங்கள் குறைவு. பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் வாழும்போது, மாதத்திற்கு 500 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும். அதேசமயம், கிங்டோ, டாலியன் மற்றும் ஜினான் போன்ற சிறிய நகரங்களில் வாழும்போது, மாதம் 300 அமெரிக்க டாலர்கள் வரைதான் செலவாகும்.

பீஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களில், ஒரு சிறிய அபார்ட்மென்டின் மாத வாடகை குறைந்தபட்சம் 200 முதல் 300 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும். அதேசமயம், சிறிய நகரங்களில் வாடகை குறைவு.

போக்குவரத்து செலவும் மிகவும் குறைவுதான். பேருந்து கட்டணம் வழக்கமாக சுமார் 15 சென்டுகள் வரைதான். பீஜிங் நகரில் சப்-வே டிக்கெட் சுமார் 30 சென்டுகள் வரை இருக்கும்.

பிரான்ஸ்

இந்நாட்டைப் பொறுத்தவரை, பாரிஸ் நகருக்கு வெளியே, மாதத்திற்கு 700 முதல் 850 யூரோக்கள் வரை செலவாகும். அதே பாரிஸ் நகராக இருந்தால் 1,100 யூரோக்கள் வரை செலவாகும். நீங்கள் தங்கும் முதல் மாதத்தில், சில கூடுதல் செலவுகள் ஏற்படும். அந்த வகையில் மொத்த செலவினத் தொகை 1,700 யூரோ என்ற அளவில் உயர்ந்து நிற்கும்.

சில செலவின விபரங்கள்

வாடகை - 300 முதல் 400 யூரோக்கள்

உணவு - 230 யூரோக்கள்

போக்குவரத்து - 35 யூரோக்கள்

பொழுதுபோக்கு - 75 யூரோக்கள்

கைச்செலவு - 35 யூரோக்கள்

படிப்பு உபகரண செலவு - 50 யூரோக்கள்

ஒரு வெளிநாட்டு மாணவருக்கு, பிரான்ஸ் நாட்டில் முதல் மாத செலவு விபரம்

வாடகை - 400 யூரோக்கள்

வீட்டு ஒப்பந்தம் - 400 யூரோக்கள்(1 மாத வாடகை)

வருடாந்திர வீட்டு காப்பீடு - 50 யூரோக்கள்

சேர்க்கை கட்டணம் - 180 முதல் 596 யூரோக்கள்

சமூக பாதுகாப்பு உறுப்புத்துவம் - 203 யூரோக்கள்

மருத்துவ காப்பீட்டு உறுப்புத்துவம் - 70 முதல் 285 யூரோக்கள்.

மேற்கண்ட செலவினங்களைத் தவிர, கேஸ், மின்சாரம் மற்றும் டெலிபோன் உள்ளிட்ட இதர செலவினங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஜெர்மனி

படிக்கும் கல்வி நிறுவனத்தின் இருப்பிடம் மற்றும் ஒரு வெளிநாட்டு மாணவரின் வாழ்க்கை முறை ஆகிய அம்சங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், தோராயமாக, ஒரு வெளிநாட்டு மாணவருக்கு, ஜெர்மனியில் மாதத்திற்கு 794 யூரோக்கள் வரை செலவாகிறது.

மியூனிச், ஹேம்பர்க் மற்றும் குலோன் போன்ற நகரங்கள் செலவு மிகுந்தவை. அதேசமயம், செம்னிட்ஸ், டிரெஸ்டென் மற்றும் எர்பர்ட் போன்ற நகரங்கள் செலவு குறைந்தவை.

சில செலவு விபரங்கள்

வாடகை - 298 யூரோக்கள்

உணவு - 165 யூரோக்கள்

உடை - 52 யூரோக்கள்

போக்குவரத்து - 82 யூரோக்கள்

மருத்துவக் காப்பீடு - 66 யூரோக்கள்

டெலிபோன், இணையம் உள்ளிட்ட வசதிகள் - 33 யூரோக்கள்

பணி மற்றும் படிப்பு உபகரணங்கள் - 30 யூரோக்கள்

பொழுதுபோக்கு - 68 யூரோக்கள்.

ஹாலந்து

உணவு, பொது போக்குவரத்து, புத்தகங்கள், துணிமணிகள், சினிமா டிக்கெட், ஹவுசிங் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற அனைத்தையும் சேர்த்து, ஒரு வெளிநாட்டு மாணவருக்கு இந்நாட்டில் சுமார் 800 முதல் 1,100 யூரோக்கள் வரை செலவாகிறது. தங்குமிடத்தைப் பொறுத்து, வாடகை 300 முதல் 600 யூரோக்கள் வரை செலவாகிறது.

இந்நாட்டின் பல நகரங்களில் குறைந்த செலவில் நல்ல உணவுகள் கிடைக்கும். அதேசமயம், ஒருவர் தானே சமைத்து உண்டால், அவருக்கு செலவு மிகவும் குறைவு. ரயில் மற்றும் சினிமா டிக்கெட்டுகளில் மாணவர்களுக்கென்று தள்ளுபடி சலுகைகள் உண்டு.

அயர்லாந்து

ஒரு மாணவரின் வாழ்க்கை முறை, வாழும் இடம் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றைப் பொறுத்து செலவினங்கள் மாறுபடுகின்றன. ஒரு சர்வதேச மாணவருக்கு, அயர்லாந்தில் ஆண்டிற்கு சுமாராக 6,000 முதல் 11,000 யூரோக்கள் வரை செலவாகிறது.

கல்விக் கட்டணத்தை தவிர, இதர செலவினங்களுக்கான வருடாந்திர தொகை

தங்குமிடம் - 2,500 முதல் 5,000 யூரோக்கள்

பாடப்புத்தகம் - 600 யூரோக்கள்

உணவு மற்றும் வீட்டுச் செலவினம் - 1,500 முதல் 2,500 யூரோக்கள்

இதர செலவுகள் - 1,000 முதல் 2,500 யூரோக்கள்.

இத்தாலி

இடத்தைப் பொறுத்து, உணவு, தொலைபேசி, உள்ளூர் போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை உள்ளடக்கி, ஒரு மாதத்திற்கு 1,000 முதல் 1,500 யூரோக்கள் வரை செலவாகிறது. இத்தாலியின் சுற்றுலா மற்றும் பெரிய நகரங்களில், இதர நகரங்களைவிட செலவு அதிகம்.

ஜப்பான்

இந்நாட்டில் தோராயமாக, ஒரு மாதத்திற்கான தங்குமிடச் செலவு 1,165 அமெரிக்க டாலர்கள். இது அதிகம்தான். அதேசமயம், அந்நாட்டைப் பொறுத்தவரை, இது சராசரி செலவு. அதேசமயம் டோக்கியோ போன்ற நகரங்களோடு ஒப்பிடுகையில், வேறு சில ஜப்பானிய நகரங்கள் செலவு குறைந்தவையாக உள்ளன.

சில செலவின விபரங்கள்

தங்குமிடம் - 34,000 யென்

மின்சாரம், தண்ணீர் மற்றும் கேஸ் - 8,000 யென்

உணவு - 26,000 யென்

பொழுதுபோக்கு - 8,000 யென்

மருத்துவம் மற்றும் காப்பீடு - 3,000 யென்

நியூசிலாந்து

தங்குமிடம், உணவு, உடை, பொழுதுபோக்கு, போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களுக்கு, ஒரு மாதத்திற்கு, ஒரு வெளிநாட்டு மாணவர், நியூசிலாந்தில் சுமார் 800 முதல் 1,000 நியூசிலாந்து டாலர்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். அதேசமயம், ஒருவர் இருக்கும் இடம், மேற்கொள்ளும் படிப்பு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்து செலவினம் மாறுபடும்.

ரஷ்யா

இந்நாட்டில் ஒரு மாதத்திற்கு 300 முதல் 400 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும். தலைநகர் மாஸ்கோவை விட, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் ஓல்கோகிராட் உள்ளிட்ட நகரங்கள் செலவு குறைந்தவை. ஒரு வாரத்திற்கான மளிகை செலவு ஒரு நபருக்கு தோராயமாக 40 முதல் 80 அமெரிக்க டாலர்கள் வரை வரும்.

ஒரு மாணவர் தனது 3 வேளை உணவை, 20 அமெரிக்க டாலர் செலவில் பெறலாம். மாதாந்திர மெட்ரோ பாஸ் எடுக்க 8 முதல் 16 டாலர்கள் வரை செலவாகும். பஸ், டிராம் மற்றும் டிராலிபஸ் ஆகிவற்றில் ஒரு தடவை பயணிக்க, (தூரத்தை கணக்கில் எடுக்காமல்) 10 முதல் 50 சென்ட்டுகள் செலவாகும்.

மேலும், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பு செலவினங்கள், ஐரோப்பாவின் இதர நாடுகள் மற்றும் வடஅமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.

சிங்கப்பூர்

ஒரு மாதத்திற்கு, ஒரு வெளிநாட்டு மாணவர் 750 முதல் 2,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். ஒருவர் எங்கு தங்கியிருக்கிறார் மற்றும் அவரின் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்து செலவினங்கள் மாறுபடுகின்றன.

இந்நாட்டில், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட பொது போக்குவரத்து அமைப்பு உள்ளது. இதன்மூலம், அதற்கான செலவுகள் மிகவும் குறைவு.

சில செலவின விபரங்கள்

தங்குமிடம் - 200 முதல் 1500 சிங்கப்பூர் டாலர்கள்

உணவு - 300 முதல் 450 சிங்கப்பூர் டாலர்கள்

பொதுப் போக்குவரத்து - 20 முதல் 100 சிங்கப்பூர் டாலர்கள்

தனிப்பட்ட செலவு - 100 முதல் 200 சிங்கப்பூர் டாலர்கள்

ஸ்பெயின்

ஒரு மாதத்திற்கு, இந்நாட்டில் 900 முதல் 1,500 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன. எந்த நகரத்தில் வசிக்கிறோம் என்பதைப் பொறுத்து செலவு மாறுபடுகிறது. ஏனெனில், பெரிய நகரங்களில் தங்குமிட செலவு மிக அதிகம். அதேசமயம், உணவு மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணம் ஆகியவை, ஏறக்குறைய நாடு முழுவதும் சற்றேறக்குறைய ஒரே மாதிரிதான்.

சில செலவின விபரங்கள்

காபி - 1.25 யூரோ

ஒரு லிட்டர் பால் - 0.80 யூரோ

சான்ட்விட்ச் - 3.50 யூரோ

மெட்ரோ அல்லது பஸ் டிக்கெட் - 1.50 யூரோ

ஒரு லிட்டர் பெட்ரோல் - 1.35 யூரோ

செய்தித்தாள் - 1.10 யூரோ

சாதாரண ஓட்டலில் உணவு - 11 யூரோ

பிரிட்டன்

இந்நாட்டைப் பொறுத்தவரை, படிக்கும் பல்கலை எந்த நகரத்தில் உள்ளது, மாணவரின் வாழ்க்கை முறை மற்றும் அவர் எந்தப் படிப்பை மேற்கொள்கிறார் என்பதைப் பொறுத்து செலவினங்கள் பெரிதும் மாறுபடுகின்றன.

ஒரு வெளிநாட்டு மாணவர், ஒரு வாரத்திற்கு 144 முதல் 270 பவுண்டுகள் வரை செலவு செய்கிறார். இதில் கல்விக் கட்டணம் அடங்காது. இந்த செலவு மாதத்திற்கு 940 முதல் 1,765 பவுண்டுகள் வரை ஆகிறது.

அமெரிக்கா

ஒரு வெளிநாட்டு மாணவர், மாதத்திற்கு தோராயமாக 800 முதல் 1000 அமெரிக்க டாலர்கள் வரை செலவு செய்கிறார். அதேசமயம், நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ போன்ற பெரிய நகரங்களில் இருந்தால் அந்த செலவு 1,250 டாலர்கள் வரையும் செல்லும்.

அதேசமயம், புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு மாணவருக்கு, ஓராண்டு வாழ்க்கை செலவினமாக சுமார் 650 முதல் 800 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன. அமெரிக்காவில் தங்குமிடங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

கல்வி நிறுவன வளாகத்தில் தங்குவதைவிட, வெளியில் தங்குவது செலவு குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், அங்கே சென்ற புதிதில், முதல் 6 மாதங்களுக்கு, கல்வி நிறுவன வளாகத்திலேயே தங்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அந்நாட்டில், வெளிநாட்டு மாணவர்களுக்கான காப்பீட்டுக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவாக, ஆண்டிற்கு 500 முதல் 1,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகிறது.

சில செலவின விபரங்கள்(ஒரு மாதத்திற்கு)

வாடகை - 400 அமெரிக்க டாலர்கள்

மளிகை - 100 அமெரிக்க டாலர்கள்

போன் - 100 அமெரிக்க டாலர்கள்

இதர செலவுகள் - 200 அமெரிக்க டாலர்கள்.

மேல்நிலைத் தேர்வுப் பணி - 2014ல் ஈடுபடும் பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / சில்லறை செலவினம் தலத்திலேயே வழங்கவேண்டும் -அரசு தேர்வுகள் இணை இயக்குனர் செயல்முறைகள்


GROUP IV EXAM 2013 CUT – OFF EXPECTED
GROUP-IV MARKS ANALYSIS & EXPECTED CUT-OFF

குரூப் -4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம் வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் 3469  உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள் இருந்தால் பணி  கிடைத்துவிடும் என சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள். ஆனால்  அவ்வாறு இல்லை என்பதே உண்மை. மொத்தமுள்ள 3469 பணியிடங்களை இனவாரியாக பிரித்தால் பொதுப் பிரிவினருக்கு 1075 பணியிடங்களும், பிற்பட்ட வகுப்பினருக்கு 919 பணியிடங்களும், மிக பிற்பட்ட வகுப்பினருக்கு 694 பணியிடங்களும், ஆதிதிராவிட வகுப்பினருக்கு 624 பணியிடங்களும் (அருந்ததியர் உட்பட), பழங்குடியினருக்கு 35 பணியிடங்களும் , முஸ்லிம்களுக்கு 122 பணியிடங்களும் நிரப்பப்படும். இதிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடும் அடங்கும்.

   ஆனாலும் பொதுப்பிரிவினர் என்ற வரையறைக்குள் அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் பங்கு பெற முடியும் என்பதால், ஒவ்வொரு பிரிவிலும் மேலும் 100 முதல் 200  பேர் வரை கூடுதலாக பணி வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.  எனவே இதனைப்  புரிந்து உங்களின் பணி  வாய்ப்பை பற்றி   ஒரு முடிவுக்கு வரலாம். உங்கள் அனைவருக்கும் பணி கிடைக்க விடியலின் நல்வாழ்த்துகள் . அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை தராமல் இருக்க நிஜத்தை புரிந்து பணி கிடைக்கும் நிலை இருந்தால் கொண்டாடுங்கள் . வாய்ப்பு குறைவாக இருந்தால் மேலும் போராடுங்கள் . 
   வெளியாகியிருக்கிற மதிப்பெண்களை வைத்து பார்க்கும் போது நமது விடியல் வெளியிட்ட கட் ஆப் ஓரளவு துல்லியமாகவே பொருந்தும் என்றே தோன்றுகிறது. எனவே மீண்டும் ஒரு முறை எமது கட்-ஆப் ஐ சரிபார்த்துக்கொள்ளுங்கள் . நன்றி : விடியல், வேலூர்.

நேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்

விளம்பரங்கள் பார்க்கிறோமே... கரண்ட் பில் கட்டலன்னு அப்பா மகனை திட்டுவாரு.. மகன் கையில செல்போன் வச்சு விளையாடிட்டு இருக்கிறாப்ல காட்சி வரும். அப்பா திட்டி முடிக்கிறதுக்குள்ள மகன் சொல்வாரு... கரண்ட் பில் கட்டியாச்சுன்னு.... இந்த நூற்றாண்டுல எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு. நேரத்தை தவிர... இந்த நேரத்தை எப்படி எல்லாம் மிச்சம் பிடிக்கலாம் யோசிச்சா... அதுல முதலிடத்த நெட் பேங்கிங் தான் பிடிச்சுக்கும்.

இப்பல்லாம் பெரும்பாலான கம்பெனிகள் நமது சம்பளத்தை நேரடியாக நமது வங்கி கணக்கில் செலுத்தி விடுகின்றன. அதனால் சம்பள பணத்தை கொண்டு போய் பேங்க்கில் செலுத்த வேண்டிய வேலை மிச்சம். தேவைக்கு மட்டும் அப்பப்போ எடுத்துக் கிடலாம். இதனால் வங்கிகளுக்கும் லாபம். குறைந்தது 2, 3 நாளைக்காவது நம்ம அக்கவுண்ட்ல பணம் இருக்கும்ல.. இது தவிர நெட் பேங்கிங் மூலம் வீட்டில் இருந்தபடியே ஏகப்பட்ட வேலைகளை பார்த்துக் கொள்ளலாம். கரண்ட் பில். மொபைல், டெலிபோன் பில் கட்டலாம். ரயில், டிராவல்ஸ் பஸ், பிளைட் டிக்கெட்... இதெல்லாம் வீட்டில் இருந்தபடியே புக் பண்ணலாம். இதற்காக பல கிமீ தூரம் டூவீலரிலோ, பஸ்சிலோ செல்ல தேவையில்லை. பெட்ரோல் ரொம்ப ரொம்ப மிச்சமாகும். டாக்ஸ் பே பண்ணலாம்..
தொலைவில் உள்ள நமது உறவினர்களுக்கு எந்த நேரத்திலும், நடு ராத்திரியா இருந்தாலும் உடனே அவங்க அக்கவுண்ட்டில் பணம் செலுத்தி விடலாம். இதற்கு பணம் செலுத்துபவருக்கு மட்டும் நெட் பேங்கிங் வசதி இருந்தால் போதும். 

பணம் பெறுபவருக்கு வங்கியில் கணக்கு இருந்தால் மட்டும் போதும். அவரது கணக்கு எண்ணில் நேரடியாக நமது பணம் சேர்ந்து விடும். டிடி செலவு மிச்சம். இதில் 2 லட்சத்திற்கு மேல் பணம் பரிமாற்றம் செய்ய ஒரு முறை, அதற்கு குறைந்த தொகையில் பணம் பரிமாற்றம் செய்ய ஒரு முறை என எளிதாக 2 முறைகள் உள்ளன. ஆர்டிஜிஎஸ் முறையில் (ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்) உடனடியாக மற்றொருவரின் கணக்கில் ரூ2 லட்சத்தை செலுத்த முடியும். என்ஈஎப்டி முறையில் (நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்பர்மர்) அதற்கும் குறைவான தொகையை செலுத்தலாம்.  இதற்கு கம்ப்யூட்டர்தான் தேவை என்பதில்லை. மல்டி மீடியா மொபைல் போன் போதும். ஸீ5 ஆயிரத்துக்கு இந்த வகை போன்கள் கிடைக்கின்றன. இதனால் உள்ளங்கையில் இருந்து உங்கள் வங்கி கணக்கை அப்பப்ப செக் பண்ணிக்கலாம். நாமே பாஸ்வேர்டு வைத்துக் கொண்டுதான் இந்த கணக்கை இயக்க வேண்டும். இந்த பாஸ்வேர்டை நினைவில் மட்டும் தான் வைத்திருக்க வேண்டும். எதிலும் எழுதி வைத்திருக்க கூடாது. இதிலும் 2, 3 அடுக்கு பாஸ்வேர்டு வசதி உண்டு. ஓடிபி எனப்படும் 3 நிமிடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் பாஸ்வேர்டுகளையும் கடைசி கட்ட பரிமாற்றத்தின் போது, வங்கிகள் நமது செல்போனுக்கு அனுப்புகின்றன. இதற்கு நமது செல்போன் எண்ணை வங்கியில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். இது கட்டாயம். என்ன நீங்களும் நெட் பேங்கிங் பக்கம் போக போறீங்களா... ஆல் தி பெஸ்ட்.
தகுதித் தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல், டி.ஆர்.பி அவசர கடிதம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரி ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர கடிதம் எழுதியிருக்கிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வின் முடிவு ஜனவரியில் வெளியிடப் பட்டது.அதில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற 26 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.இந்த நிலையில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 5 சதவீதமாக குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம்தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது.இந்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு சலுகை காரணமாக கூடுதலாக 47 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றனர்.

தேர்தல் நடத்தை விதிகளால் சிக்கல்

அவர்களில் முதல்கட்டமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மார்ச் 12-ம் தேதி முதல் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். அதைத்தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. முதல் தாளில்வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதமும் ஆன்லைனிலேயே வெளியிடப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம், புதன்கிழமை (6-ம் தேதி) வெளியிட்டது. இதையடுத்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனால், தகுதித்தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர் களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தகுதித்தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான அறிவிப்பு நடத்தை விதி அமல்படுத்தப்படுவதற்கு முன்பே வெளியிடப்பட்டு விட்டதால், எஞ்சியுள்ளவர்களுக்கு தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த அனுமதி அளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாருக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி முடிவு தெரிவிப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தாலும் நடத்தை விதிகள்அமலில் இருக்கும் வரை, ஆசிரியர் பணிநியமன பணிகளை தொடரவோ, தேர்வுமுடிவை வெளியிடவோ இயலாது என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

...

No comments:

Post a Comment