Friday, January 11, 2013

NEWS 11.1.2013

நேரடி டி.இ.ஓ. தேர்வுமுறையில் அதிரடி மாற்றம்: டி.இ.ஓ. தேர்வில் விண்ணப்பதாரர்கள் படித்த பாடங்களில் இருந்து மட்டுமின்றி பொது அறிவு, ஆளுமைத்திறன், உளவியல், நிர்வாகத்திறமை போன்றவற்றை ஆராயும் வகையில் புதிய வினாக்கள் சேர்க்கப்பட உள்ளன. புதிய தேர்வுமுறையில் பொதுஅறிவு தாளும் விருப்பப் பாட தாள் ஒன்றும் இடம்பெறக்கூடும்.மேலும், குரூப்–1 தேர்வை போன்று நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்ணையும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. விரைவில் 12 டி.இ.ஓ. காலி பணி இடங்கள் நேரடித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வில் புதிய தேர்வுமுறை பின்பற்றப்படும் தெரிகிறது.
ஒரு கோடி புத்தகங்களுடன் 36-வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடக்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 36-வது புத்தகக் காட்சி சுமார் ஒரு கோடி புத்தகங்களுடன் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 11) தொடங்குகிறது.

இது குறித்து பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.வைரவன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் அறிவுத் திருவிழாவான புத்தகக் காட்சி, இந்த ஆண்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் ஜனவரி 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறுகின்றன.

கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தொடங்கி வைக்கிறார். பபாசி விருதுகளை செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்குகிறார். மாநகர மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

36-வது புத்தகக் காட்சி சுமார் 1.80 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 750 அரங்குகளுடன் நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம், கேரளம், ஆந்திரம், வட மாநிலங்கள், ஜப்பான் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இருந்தும் 250 தமிழ்ப் பதிப்பாளர்கள், 127 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 37 ஊடகப் பதிப்பாளர்கள், 36 புரவலர் அரங்குகள் என 450 பங்கேற்பாளர்கள் 750 அரங்குகளில் புத்தகங்களை விற்பனைக்கு வைக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் என 14 பேர்களின் பெயர்களில் அரங்கு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாசகர்கள் தங்களுக்குத் தேவையான நூல்கள் எங்கு கிடைக்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை தொடுதிரை மூலம் தெரிந்து கொள்ளலாம். காட்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் தினசரி மாலை 6 மணி முதல் 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டி மண்டபம், கவியரங்கம், இலக்கிய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

வாசகர்களுக்கு 6 இடங்களில் நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.5 வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குள்பட்டவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். மாணவ-மாணவிகளுக்காக சுமார் 5 லட்சம் இலவச அனுமதிச் சீட்டுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. வார நாள்களில் பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வழக்கம்போலவே அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

புத்தகக் காட்சியில் ரூ.5 முதல் ரூ.50 ஆயிரம் விலையிலான நூல்கள், சுமார் 5 லட்சம் தலைப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. நிகழாண்டில் சுமார் 12 லட்சம் வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சங்கத்தின் பொருளாளர் ஏ.ஆர்.வெங்கடாசலம், துணைத் தலைவர்கள் எம்.சுப்பிரமணியம், ராம.லட்சுமணன், முன்னாள் தலைவர் சேது.சொக்கலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

பபாசி விருது பெறுபவர்கள் அறிவிப்பு
புத்தகக் காட்சியில் பபாசி விருது பெறுபவர்களை சங்கத்தின் நிர்வாகிகள் புதன்கிழமை அறிவித்தனர்.
அதன்படி, பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது நர்மதா பதிப்பகத்தின் டி.எஸ்.ராமலிங்கத்துக்கு வழங்கப்படுகிறது. பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது தமிழ்நாடு புக் ஹவுஸின் ஜெ.சிதம்பரம் பிள்ளைக்கும், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது குழந்தைகளுக்கான எழுத்தாளர் எஸ்.லீலாவுக்கும், சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான ஆர்.கே.நாராயணன் விருது மு.சிவலிங்கத்துக்கும் வழங்கப்படுகிறது. அதேபோல் பபாசியின் சிறந்த நூலகர் விருதுக்கு டி.கே.திருவேங்கடமணியும், சிறப்பு விருதுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பாளர்களும், நெல்லை சு.முத்து வழங்கும் சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான விருதுக்கு காலேப் எல்.கண்ணனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கவியரங்கில் வாலி, உரையரங்கில் வைகோ
காட்சியில் தினசரி நடைபெறும் கவியரங்கம், உரையரங்கம், பட்டி மண்டபம் போன்றவற்றில் பங்கேற்க உள்ளவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் வாலி கவியரங்கிலும், வைகோ, எஸ்.ராமகிருஷ்ணன், நடராஜ் ஐ.பி.எஸ்., சகாயம் ஐ.ஏ.எஸ்., பிரபஞ்சன், ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர் உரையரங்குகளிலும் பங்கேற்கின்றனர்.
பாஸ்போர்ட் பெற "ஆதார்' சான்றாகிறது

ஆதார் அடையாள அட்டையை, பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான இருப்பிட மற்றும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பின்போது, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை போன்றவை, இருப்பிட மற்றும் அடையாள சான்றுகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இவற்றுடன் தற்போது, ஆதார் அடையாள அட்டையையும், பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான இருப்பிட மற்றும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம் என, வெளியுறவுத் துறை அமைச்சம் அறிவித்துள்ளது. சாதாரண மற்றும் தத்கல் முறை விண்ணப்பங்களுக்கு, இந்த அறிவிப்பு பொருந்தும். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.100 உயர்த்த மத்திய அரசு முடிவு

மானிய விலையில் அளிக்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆறிலிருந்து, ஒன்பதாக அதிகரிக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், மானிய விலை காஸ் சிலிண்டரின் விலையை, 100 ரூபாய் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாலும், மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, மானிய விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆண்டுக்கு, ஆறாக குறைத்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மானியமில்லாத சிலிண்டருக்கு, 900 ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருப்பதால், நடுத்தர குடும்ப மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம், இது தொடர்பாக, சில முக்கிய யோசனைகளை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆறிலிருந்து ஒன்பதாக அதிகரித்து, அறிவிப்பு வெளியிடலாம். இதனால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, கடும் நிதி இழப்பு ஏற்படும். இதை ஈடுகட்டுவதற்காக, மானிய விலை சிலிண்டரின் விலையை, 100 ரூபாய் வரை அதிகரிக்கலாம். இரண்டு தவணைகளில், இந்த விலை உயர்வை செயல்படுத்தலாம். இது, இந்த நிதியாண்டுக்கான விலை உயர்வு.

அடுத்த நிதியாண்டிலிருந்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, காஸ் சிலிண்டரின் விலையை, 50 ரூபாய் உயர்த்தலாம். எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடு செய்யும் வரை, இந்த விலை உயர்வை தொடரலாம்.

டீசல் விலையும்
டீசல் விலையை, வரும் மார்ச் மாதத்துக்குள், லிட்டருக்கு, 4.50 ரூபாய் வரை உயர்த்தலாம். இந்த விலை உயர்வை, ஒரே தவணையில் உயர்த்தலாம் அல்லது மாதம் தோறும், 1.50 ரூபாய் உயர்த்தலாம். அடுத்த நிதியாண்டு துவக்கமான, ஏப்ரல் முதல், இழப்பை ஈடு செய்யும் வரை, மாதம் தோறும், 1 ரூபாய் வரை உயர்த்தலாம். மண்ணெண்ணெய் விலையை, இந்த நிதியாண்டு இறுதிக்குள், மாதம் தோறும், 35 பைசா வரை, உயர்த்தலாம்.

இவ்வாறு பெட்ரோலிய அமைச்சகம், மத்திய அமைச்சரவைக்கு யோசனை தெரிவித்துள்ளது. ஆனாலும், இது தொடர்பாக, மத்திய அமைச்சரவை பரிசீலித்த பின்பே, இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ரயில் கட்டணங்கள் உயர்வு: ரூ.12 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு

ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ரயில் கட்டண உயர்வு ஜனவரி 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என ரயில்வேத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியுள்ளார்.


மத்திய ரயில்வேத்துறை மத்தியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி கட்சிகள் வசம் இருந்து வந்தது. இதனால் ரயில்வே கட்டணத்தை உயர்த்தவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணத்தை, ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி உயர்த்தினார். இதனால் அவரது கட்சி தலைவர் மம்தா அதிருப்தியடைந்தார். ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும என்று விடாப்பிடியாக இருந்தார். இதனால் உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் குறைக்கப்பட்டது. ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து தினேஷ் திரிவேதி நீக்கப்பட்டார். அவருக்கு பதில் திரிணமுல் கட்சியை சேர்ந்தவரே ரயில்வே அமைச்சராக பதவியேற்றார்.இதன் பின்னர் ரயில்வே அமைச்சர் பதவி காங்கிரஸ் வசம் வந்தது. இதனையடுத்து ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்படும் என அமைச்சர்கள் கூறி வந்தனர். எப்போது உயர்த்தப்படும் என கூறப்படவில்லை. ரயில்வே துறை பயணிகள் கட்டண பிரிவில் ரூ.24,000 கோடி நஷ்டத்தை சந்தித்து வருவதாக மத்திய அரசு கூறி வந்தது.

இந்நிலையில் ரயில்வே கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ரயில்வே கட்டணங்கள் குறித்து அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரயில் கட்டணங்கள் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. தற்போது ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ரயில்வே பாதுகாப்பு, சுகாதார வசதிகளை கருத்தில் கொண்டும், 6வது சம்பள கமிஷன் காரணமாகவும் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படாது. ரயில் கட்டண உயர்வு மூலம் 12 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என கூறினார். இந்த கட்டண உயர்வு ஜனவரி 21ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது எனவும் கூறினார்.

இதன்படி, ஏசி முதல் வகுப்புக்கான ரயில் கட்டணம் கி.மீ., க்கு 10 பைசாவும், இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 2 பைசாவும் உயர்த்தப்படுகிறது. மேலும், தூங்கும் வசதி கொண்ட ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 6 பைசாவும், ஏசி இருக்கை வசதி கொண்ட ரயிலுக்கான கட்டணம் கி.மீ.,க்கு 10 பைசாவும், ஏசி மூன்றடுக்கு ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 10 பைசாவும், ஏசி இரண்டடுக்கு ரயில் கட்டணம் கி.மீ.,க்கு 6 பைசாவும், எக்ஸ்பிரஸ் ரயில்களில் கிலோ மீட்டருக்கு 4 பைசாவும் உயர்த்தப்படுகிறது.

No comments:

Post a Comment