Friday, February 7, 2014

TET - தேர்ச்சிமதிப்பெண்ணை 82 என நிர்ணயித்துள்ளதால் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்பு

           ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில்தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெறலாம்.

          இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

                       ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தேர்ச்சி மதிப்பெண் (60 சதவீதம்) 150-க்கு 90 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிளித்த முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என அறிவித்தார்.இந்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82.5 ஆகக் குறைகிறது. இந்த மதிப்பெண்ணை முழு மதிப்பெண்ணாக மாற்றுவதற்காக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 என நிர்ணயம் செய்யப்படுகிறது.அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 150-க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும்.

                      இந்த மதிப்பெண் சலுகையையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.இனி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண் 90 எனவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் 82 எனவும் நிர்ணயிக்கப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம்:

                   இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சிமதிப்பெண்ணை 82.5-க்குப் பதில் 82 என நிர்ணயித்துள்ளதால் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.எனவே, 82.5 என்ற மதிப்பெண்ணுக்குப் பதிலாக 82 அல்லது 83 என்ற முழு மதிப்பெண் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

               இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கென தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.அதன் பிறகே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

TET - Pass Mark 82 / 150 - GO Issued.

          TRB - TET  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினர் 82 / 150 (55%) மதிப்பெண்கள் பெற்றாலே வெற்றி பெற்றவர்களாவர்கள் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


         மேலும் இந்த புதிய அரசாணை ஆகஸ்ட் 2013 ல் தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  •  ஆனால் 2012 டி.இ.டி. தேர்வில் 82 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தேர்வர்களுக்கு இந்த மதிப்பெண் சலுகை இல்லை.
  • இடஒதுக்கீட்டு பிரிவினர் என்பவர்கள் (SC, ST, MBC, BC, BC-M, சீர் மரபினர், மாற்றுத்திறனாளிகள் ஆவர்).
முதுகலை ஆசிரியர் வராலாறு பாடத்துக்கான தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியல் வாபஸ்

முதுகலை ஆசிரியர் வராலாறு பாடத்துக்கான தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வாபஸ் பெற்றுள்ளது. கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதர பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது.


இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி வாபஸ் பெற்றுள்ளது. இதுகுறித்து டிஆர்பி தனது இணையதளத்தில் RESULT FOR TAMIL MEDIUM HISTORY IS WITHDRAWN FOR COMPUTER VERIFICATION. என தெரிவித்துள்ளது.

உரிய கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற சிலரது பெயர் விடுபட்டதே அதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே அது சரிசெய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்படும் என தெரிவருகின்றது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணிநியமனம் வழங்கவேண்டும் என தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
13ம் தேதி தமிழக பட்ஜெட்: பள்ளிக்கல்விக்கு 19,000 கோடி?

தமிழக அரசின் 2014-2015ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை கருதி பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள்,

சலுகைகள் வெளியாகலாம் என்று தெரிகிறது. 2014ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்தமாதம் 30ம் தேதி நடைபெற் றது. அப்போது கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். இதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம்நடைபெற்று, பேரவை கூட்டம் கடந்த 3ம் தேதி முடிவடைந்தது.இந்நிலையில், சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற 13ம் தேதி காலை 10மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை சட்டமன்ற பேரவை தலைவர் கூட்டியுள்ளார். அன்று காலை 10 மணிக்கு 2014-2015ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) பேரவைக்கு அளிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார். அன்றைய தினம் பேரவையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுவார். பட்ஜெட் உரையை அமைச்சர் படித்து முடித்ததும், பேரவை நிகழ்ச்சிஅத்துடன் ஒத்திவைக்கப்படும்.இதையடுத்து, பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், பேரவைத்த லைவர் தனபால் தலைமையில் நடக்கும்.

அதில், பட்ஜெட் உரை மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவதுஎன்பது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும். பட்ஜெட் மீதான விவாதம் வருகிற17ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது. விவாதத்துக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் பதில் அளிப்பார். இதைத்தொடர்ந்து, பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். வழக்கமாக பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்படும். மானிய கோரிக்கை கூட்டம் வழக்கமாக ஒரு மாதம் நடைபெறும்.ஆனால் இந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 21ம் தேதிக்கு பிறகு எந்த நிமிடமும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இப்படி தேர்தல் அறிவித்தால், புதியஅறிவிப்புகள் எதையும் அரசு சார்பில் வெளியிட முடியாது. மேலும், தேர்தல் அறிவித்த பிறகு மார்ச் முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பணியாற்ற அனைத்து அரசியல் கட்சியினரும் தயாராகி விடுவார்கள். இதனால் வழக்கமான பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், தொடர்ந்து நடைபெறும் மானிய கோரிக்கை கூட்டம் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஜூன் அல்லது ஜூலை மாதம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக அரசு 13ம் தேதி தாக்கல் செய்ய உள்ள 2014-2015ம் ஆண்டு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், வழக்கம்போல் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். நிதி பற்றாக்குறையை சமாளிக்க ஆடம்பர பொருட்களுக்கு கூடுதல் வரியும், சமையல் பொருட்களுக்கு வரி குறைப்பும் செய்யப்படலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு (2013-2014) தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 21ம் தேதி தொடங்கி மே மாதம் 16ம் தேதி வரை 34 நாட்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment