Friday, June 21, 2013

தொடக்க / உயர் தொடக்க நிலை ஆசிரியர் -களுக்கு குறுவள மைய பயிற்சிக்கான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி 25, 26.06.2013 அன்றும், மாவட்ட கருத்தாளர் பயிற்சி 27, 28.06.2013 அன்றும் நடத்த மாகஆபநி உத்தரவு


முப்பருவத் திட்டம் - 2013-14 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம்

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின்  செயல்படும்.

காலை 9.00 - 9.20 இறைவணக்கம் (திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை 
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10 நான்காம் பாடவேளை
12.10 - 12.25 யோகா
12.25 - 12.40 பாட இணை செயல்பாடுகள்
12.40 - 1.10 உணவு இடைவேளை
1.10 - 1.25 மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகள்
1.25 - 2.05 ஐந்தாம் பாடவேளை
2.05 - 2.45 ஆறாம் பாடவேளை
2.45 -2.55 இடைவேளை
2.55 - 3.35 ஏழாம் பாடவேளை
3.35 - 4.15 எட்டாம் பாடவேளை
TET தேர்வு அறிவிப்பின் முழு விவரம்

இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் (Right of Children to Free and Compulsory Education (RTE) Act # 2009) என்ற முக்கியமானதோர் சட்டம் 2009-இல் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் 6- 14 ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டுமென கூறப்பட்டது. அதற்கு தரமான ஆசிரியர்கள் இருந்தால்தான் குழந்தைகளுக்கான கல்வியும் தரமானதாக இருக்கும் என கொள்கை வகுக்கப்பட்டது.


இச்சட்டத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் நாடு முழுவதும், 10 இலட்சம் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவை. அப்போதுதான் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தை உறுதி செய்ய முடியும் எனவும் அந்த ஆசிரியர்கள் தரமிக்கவர்களாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு என இந்த சட்டம் வலியுறுத்துகிறது. அதற்கு தரமிக்க ஆசிரியர்களை உருவாக்க நாடு முழுவதும் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டுமென சட்டம் தெளிவாக கூறுகிறது.

ஆக, அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இதற்காக கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மத்திய அளவில் நாடு முழுவதும் (காஷ்மீர் மாநிலம் நீங்கலாக) ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (National Council for Teacher Education# NCTE) வழிக்காட்டுகிறது. அந்த வழிகாட்டுதலை அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்து மத்திய ஆட்சிப் பகுதிகளும் பின்பற்ற வேண்டும். ஆண்டுக்கொருமுறை அனைத்து மாநிலங்களின் கல்வி செயலர்களும் தகுதித் தேர்வு பற்றி விரிவான ஆலோசனை மற்றும் ஆண்டறிக்கையை என்.சி.டி.இ. கூட்டத்தில் அளிக்க வேண்டும்.

இந்திய அளவில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

(Central Teacher Eligibility Test # CTET) நடத்தப்படுகிறது. இத்தேர்வினை சி.பி.எஸ்.சி (Central Board of Secondary Education) நடத்தி வருகிறது.

இதில் நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப்பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் எழுத வேண்டும். மாநிலங்கள் தோறும் அந்தந்த மாநில அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை (Teacher Eligibility Test# TET) நடத்துகின்றன. அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் வாரியம் (TRB# Teacher Recruitment Board) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வை (Tamilnadu Teacher Eligibility Test# TNTET) நடத்துகிறது.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் 1 முதல் 8 வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசின் கல்வித்துறை செயலாளர்களுக்கு தகவல் 11.02.2011 அன்று அனுப்பப்பட்டது. அதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டுமென கூறி, அதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியது.

இந்திய அரசின் மத்திய பள்ளிகள் வாரியத்தின் (சி.பி.எஸ்.சி) கீழ் இணைப்பு பெற்ற பள்ளிகளில் (கேந்திரிய வித்யாலய சங்காதன், நவோதயா வித்யாலயா சமிதி, மத்திய இடை நிலைக் கல்வி வாரியம்) பணியாற்றுவதற்கான ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது. இந்திய அரசின் மத்திய பள்ளிகள் வாரியம் (சி.பிஎஸ்.சி) இத்தேர்வுகளை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழி காட்டுதலின் படி, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இந்தத் தேர்வுக்கான அரசாணையை (G.O. (M.S) சர். 181- 15.11.2012) இல் வெளியிட்டது. இதன்படி, இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள் (Secondary Grade Teachers) மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் ஆசிரியர்(Graduate Assistants) மட்டுமே தகுதித் தேர்வை எழுத வேண்டும்.

கல்வித்தகுதி

* ஆசிரியர் கல்விக்கான தேசியக் குழுவின் (என்.சி.டி.இ.,) அறிவிக்கை நாள், 23.8.2010க்குப் பின், அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும், பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி., தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

* இந்த தேதிக்குப் பின், பணி நியமனம் பெற்றிருந்தாலும், பணி நியமன நடவடிக்கைகள், மேற்கண்ட தேதிக்கு முன் துவங்கியிருந்தால், அவர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.

* குறிப்பிட்ட தேதிக்குப் பின், பணி நியமன வேலைகள் துவங்கி, வேலையில் சேர்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆர்.டி.இ., விதிப்படி, ஐந்து ஆண்டுகளுக்குள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

* நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் இறுதித் தேர்வை எழுதுபவர்களும், டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது.

* தாள்-I: 1- 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் களுக்கானது. டீ.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுத தகுதியானவர்கள். இத்தேர்வில் குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களைக் கொண்டது.

* தாள்-II: 6 - 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இது. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுத தகுதியானவர்கள். இத் தேர்வில் அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களுடன், கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்டதாக வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே வினாத்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலிலில் இருந்து 60 வினாக்கள் அமைந்திருக்கும்.

* முதல் தாளினை 1 முதல் 5 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது ஆசிரியப் பயிற்சி முடித்தவர்கள், இரண்டாம் தாளினை 6 முதல் 8 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது இளங்கலைப் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் எழுத வேண்டும். இரண்டிலும் தகுதிப் பெற விரும்புபவர்கள் இரண்டு தாளினையும் எழுதலாம். இறுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களும் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்ச்சிப் பெற 60% மதிப்பெண் (90 மதிப்பெண்) பெற வேண்டும் வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும்.

* ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அமைந்திருக்கும் (மொழிப் பாடங்கள் தவிர). நெகடிவ் மதிப்பெண் வழங்கப் படமாட்டாது. முதல் தாளானது 1 முதல் 5 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத காத்திருப்பவர்களுக்கு, குழந்தை வளர்ப்பு மற்றும் கற்பிக்கும் பகுதி-I (6 முதல் 11 வயது); மொழி பகுதி-II (தமிழ்/ தெலுங்கு/ மலையாளம்/ கன்னடம்/ உருது); மொழி பகுதி -III (ஆங்கிலம் - இதில் அடிப்படைகள், கம்யூனிகேஷன், காம்ப்ரிகென்சன்); கணிதம் பகுதி-IV; சுற்றுச்சூழல் கல்வி பகுதி-V(இதில் கோட்பாடுகள், தீர்வு காணும் திறன், கற்பிக்கும் முறை) ஆகியவற்றில் 30 கேள்விகள் வீதம் 150 வினாக்கள் கேட்கப்படுகிறது.

* இரண்டாம் தாளானது 6-வது முதல் 8-வது வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர் களுக்கு, குழந்தை வளர்ப்பு மற்றும் கற்பிக்கும் முறை பகுதி-I (11 முதல் 14 வயது); மொழி II (தமிழ்/தெலுங்கு/ மலையாளம்/ கன்னடம்/ உருது), மொழி III (ஆங்கிலம்- இதில் அடிப்படைகள், கம்யூனிகேஷன், காம்ப்ரிகென்சன்) இந்த 3 பிரிவும் அனைவருக்கும் பொதுவானது. இதிலிருந்து தலா 30 வினாக்களும், கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு இவற்றில் 60 வினாக்களும்; சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அதில் 60 வினாக்களும் மற்ற பாட ஆசிரியர்கள் இதில் (கணிதம்-அறிவியல் அல்லது சமூக அறிவியல்) ஏதாவது ஒன்றினைத் தெரிவு செய்ய வேண்டும்.

தகுதி சான்றிதழ்

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம். ஆனால் தகுதித் தேர்வு சான்றிதழ் பெற எத்தனைமுறை தேர்வை எழுதலாம் என எதுவும் குறிப்பிடவில்லை. ஒருவர் இந்தத் தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்றால், மீண்டும் தகுதித் தேர்வை எழுதி தனது மதிப்பெண்ணை அதிகரித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பம்

வரும், ஜூன், 17-ஆம் தேதி, காலை, 10 மணி முதல், ஜூலை, 1-ஆம் தேதி, மாலை, 5:30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 50 ரூபாய் கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தேர்வு கட்டணம்

* எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவு தேர்வர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் 250 ரூபாயும், இதர பிரிவு தேர்வர்கள், 500 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

* தேர்வுக்கட்டணத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளைகளில் அல்லது இந்திய ஓவர்சீஸ் வங்கி அல்லது கனரா வங்கி வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் செலுத்தலாம்..

* விண்ணப்ப தகவல் கையேட்டில் உள்ள சலான் (Challan) மூலமே தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ""ஆன்-லைன்' வழியாகவோ, தபால் மூலமாகவோ, பேக்ஸ் மூலமாகவோ தமிழ்நாடு ஆசிரியர் வாரியத்திற்கு அனுப்பக்கூடாது. நேரடியாக அந்தந்த டி.இ.ஓ., (District Educational Office)அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் (ஜெராக்ஸ்) எடுத்துக்கொண்டு அனுப்பி வைக்கவும். அது பின்னர் தகவலுக்கு தேவைப்படும்.

தேர்வு மையங்கள்

மாநிலம் முழுவதும், 66 கல்வி மாவட்ட தலைநகரங்களில் (Educational District Headquarters), தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

முக்கிய தேதிகள்

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டி.இ.ஓ., அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 1-7-2013

* தேர்வு தேதிகள்: இடைநிலை ஆசிரியர் பணிக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வு ஆகஸ்ட், 17-ஆம் தேதி (17-8-2013); பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட், 18-ஆம் தேதி (18-8-2013) நடக்கின்றன.

* இரு தேர்வுகளும், காலை, 10:00 மணி முதல், நண்பகல், 1:00 மணி வரை நடக்கும்.
RMSA திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி 10.07.2013 முதல் 30.07.2013 நடத்த இயக்குனர் உத்தரவு

 

No comments:

Post a Comment