Monday, December 31, 2012

இரண்டு மாதங்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் கிடையாது: உணவுத் துறை அமைச்சர் அறிவிப்பு

தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகள் மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஜனவரி 1-ம் தேதி நடைபெற இருப்பதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.
"ரேஷன் அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி ஜனவரி 1-ல் தொடக்கம்'

ரேஷன் அட்டைகளை புதுப்பிக்கும் வகையில், அவற்றில் உள்தாள்களை ஒட்டும் பணி ஜனவரி 1-ம் தேதி தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை அமைச்சர் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் அவர் கூறியது: தமிழகத்தில் விலையில்லாத அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ், 1.84 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 33 ஆயிரத்து 474 ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்கான ஒதுக்கீட்டின்படி அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் வரும் 5-ம் தேதிக்குள் நகர்வு செய்யப்பட்டு இருப்பு வைக்க வேண்டும்.

அட்டைதாரர்களுக்குத் தேவையான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை மானிய விலையில் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 21 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் பாமாயில் சென்னை துறைமுகத்துக்கு மூன்று கப்பல்கள் மூலமும், தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஒரு கப்பல் மூலம் 8 ஆயிரம் மெட்ரிக் டன் பாமாயிலும் கொண்டு வரப்படுகிறது.

உள்தாள் ஒட்டும் பணி: இப்போது நடைமுறையிலுள்ள ரேஷன் அட்டைகள் 2013-ம் ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அவற்றின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜனவரி 1-ம் தேதி முதல் ரேஷன் அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி நடைபெறவுள்ளது. இதன்படி, குடும்பத் தலைவர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் ரேஷன் கடைக்குச் சென்று உள்தாளை பெற்றுக் கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் கையெழுத்திடுவது கட்டாயமாகும்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏற்பாடு:
ரேஷன் அட்டைதாரர்கள் கூட்ட நெரிசல் இன்றி புதுப்பித்தல் பணியை மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரேஷன் அட்டைகளைப் புதுப்பிக்க கடைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
திங்கள் முதல் வெள்ளி வரை சுழற்சி முறையில் தங்கள் ரேஷன் அட்டைகளைப் புதுப்பிக்க கடைகளுக்கு வர முடியாதவர்கள், அந்த வாரத்தில் சனிக்கிழமை கடைக்கு வந்து அட்டைகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் பி.எம்.பஷீர் அஹமது, நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்:
ரேஷன் கடைகளில் தரமான பொருள்களை விநியோகம் செய்ய மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

இது குறித்து தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், பொது விநியோகத் திட்ட கிடங்குகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் இருப்பு வைத்து, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளரின் ஒதுக்கீட்டின்படி கடைகளுக்கு அனுப்ப வேண்டும்.

இதை உறுதி செய்யவும், கடைகளில் அனைத்துப் பொருள்களும் இருப்பு வைத்திருப்பது, பொருள்களின் தரம் குறித்த புகார்கள், கடைகளில் தரமற்ற பொருள்கள் காணப்பட்டால் அவற்றை விநியோகம் செய்யாமல் கிடங்குகளுக்கு அனுப்பி தரமான பொருள்களை பெறுதல் ஆகிய பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு, மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
கூட்டுறவு சங்க உதவியாளர் நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருந்த 3589 உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 9ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டிசம்பர் 28 முதல் ஜனவரி 1ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி 28ம்தேதி நேர்முகத்தேர்வு நடந்தது. நேற்று நேர்முகத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

 இதனையடுத்து தேர்வுக்கு வந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பலத்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதாக விண்ணப்பதாரர்கள் கூறியிருந்தனர். இதன் அடிப்படையிலும், சான்றிதழ் சரிபார்ப்பதற்கு போதிய இடமில்லாத காரணத்தினாலும், நேர்முகத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

TNPSC C.S.S.E-II - Exam Result Published

72 பள்ளிகளில் ரூ.2.58 கோடியில் அடிப்படை வசதி

திருப்பூரில், 2.58 கோடி ரூபாய் செலவில், 72 மாநகராட்சி பள்ளிகளில், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, சீரமைக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ப
ள்ளிகளில், குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தன. மேல்நிலைத் தொட்டி அமைத்து தண்ணீர் வசதியும், கழிப்பிடம் அமைத்துக் கொடுக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை சீரமைத்து, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி முதல் மண்டலத்தில் உள்ள 12 மாநகராட்சி பள்ளிகளில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இரண்டாவது மண்டலத்தில் 32 பள்ளிகளில் 65 லட்சம் ரூபாய் செலவிலும், மூன்றாவது மண்டலத்தில் 17 பள்ளிகளில் 62.40 லட்சம் ரூபாய்; நான்காவது மண்டலத்தில் 66 லட்சம் ரூபாய் செலவில் தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

நான்கு மண்டலத்திலும் சேர்த்து, மொத்தம் 72 பள்ளிகளுக்கு, 2.58 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தொகையை கல்வி நிதியிலிருந்து செலவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் இணைய மாநாட்டில் சிறுவர்களுக்கான பொது அறிவு சிடி

சிதம்பரத்தில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சியில் சிறுவர்களுக்கான பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் சிடி மற்றும் டிவிடிக்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கண்காட்சியில் 20 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் எழுத்துருக்கள் மல்டி மீடிய சிடி, குழந்தைகளுக்கான சிடி, பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களுக்கான சிடிக்கள், மொபைல் மற்றும் மடிகணினிகளில் தமிழைப் பயன்படுத்தும் மென்பொருள்கள் அச்சு வடிவமைப்பு, முன்னணி பத்திரிகை நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 

தமிழ் யூனிகோடு எழுத்துருக்கள், தமிழ் 99 விசைப்படகுகள், விக்கிபீடியா இணைய பக்க வடிவமைப்புகள், கைபேடு மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற பல கணினி கருவிகளில் மென்பொருள்கள் காட்சியில் இடம் பெற்றிருந்தன. முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சமச்சீர் கல்வி டிவிடி, ஸ்போக்கன் இங்கிலீஷ், இலக்கணம், பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் சிடி மற்றும் டிவிடிக்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

பிளஸ் 2 மாணவர்களுக்கான ஒரு மதிப்பெண் வினா வங்கி, லேர்ன் சப்ஜெக்ட் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு சிடிக்கள், கணி திறன் அறிய ஒளிப்பியார்டுகளில் ஏதுவான சிடிக்களும் 20 சதவீத தள்ளுபடி விலையில் கண்காட்சியில் விற்பனை செய்தனர். இதுதவிர குழந்தைகள், நர்சரி பாடல்கள், நல்லொழுக்கக் கதைகள், மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்றவர்களின் வரலாற்று நூல்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன.

தினமலர் நாளிதழ் சார்பில் கண்காட்சியில் இணையதளம் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி தொடர்பான செய்திகள், மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் உள்ளிட்ட பல கல்வித் தகவல்களை "கல்வி மலர்" இணையதளம் வழங்குகிறது. 

மாநில மற்றும் மத்திய, நிகர்நிலை பல்கலைக்கழங்கள், தொழிற்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் பற்றி விரிவான விவரங்கள் இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல், மருத்துவம், கால்நடை, கலை அறிவியியல், சட்டம் உட்பட அனைத்துத் துறை சார்ந்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 

வெளிநாட்டு கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக ஆராய வேண்டிய விவரங்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அது தொடர்பான ஆலோசனைகள் இந்த இணைய தள அரங்கில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொண்டனர். இதுதவிர நாட்டு நடப்புகள், உடனுக்குடன் செய்தி, தேர்வு முடிவுகள் மற்ற இணைய தளத்திற்கு முன்னோடியாக செயல்பட்டு வருவதை பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. 

மேலும், தமிழ் இணைய கல்விக் கழகம், விஷூவல் மீடியா, டெக்லாஜிசிஸ் உட்பட பல மென்பொருள் நிறுவனங்கள் கண்காட்சியில் குறைந்த விலையில் விற்பனை செய்தது பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது.
10ம் வகுப்பு மாணவர் விவரம்: ஜனவரி 23 வரை காலக்கெடு- Dinamalar

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம். 

இம்முறை, "மாணவ, மாணவியர் விவரங்களை, இணையதளம் வழியாக, ஜனவரி 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்" என, தேர்வுத்துறை உத்தரவிட்டது. 

"மின்வெட்டு பிரச்னையால், இணையதளத்தில் மாணவ, மாணவியரின் பெயர்களைப் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது" என, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, ஜனவரி 23ம் தேதி வரை நீட்டித்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இணையதளங்களால் மழுங்கடிக்கப்படும் இளைய தலைமுறையினர்

"இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை" தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்," என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், இணையதளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களின், செவிட்டில் அறைவது போல், கூறியுள்ளார்.

பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். "டெய்லி மெயில்" என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி:

இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும், இணையதளம் மூலமாகவே, அறிய முயற்சிக்கின்றனர். "இது எப்படி சாத்தியம்; அது என்ன; இதை எப்படி செய்யலாம்" என்பது போன்ற, பல்வேறு கேள்விகளுக்கு, இன்றைய இளைஞர்கள், உடனடியாக, "கூகுள்" இணையதளத்தை தான், நாடுகின்றனர்.

ஒரு விஷயத்தை எப்படி செய்யலாம் என்பது பற்றி, அவர்கள் சிந்திப்பதும் இல்லை; கற்பனை செய்து பார்ப்பதும் இல்லை. இதனால், அவர்களின் மூளை, மழுங்கடிக்கப்பட்டு வறட்சியாகி வருகிறது. அனுபவ ரீதியாகவோ, செயல்முறை சார்ந்தோ, எந்த விஷயத்தையும் அவர்கள் செய்வது இல்லை. 

இணையதளங்களால், தாங்களாக, சொந்தமாக எதையும் செய்ய முடியாதவர்களாக மாறி வருகின்றனர். இது, அபாயகரமான போக்கு. இணையதளங்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் உதவி இல்லாமல், அவர்களால் எதையும் செய்ய முடிவது இல்லை. முழுக்க முழுக்க, அவர்கள், இவற்றை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றுக்கு அடிமையாகி வருகின்றனர்.

எனவே, பள்ளிகளில், குழந்தைகளுக்கான, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். குறிப்பாக, செயல்வழி கற்றல் நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். சில மாதிரி பொருட்களை கொடுத்து, "ஒரு பாலத்தை, எப்படி கட்டுவது; இந்த கட்டடத்தை எப்படி வடிவமைப்பது" என, குழந்தைகளை செய்யும்படி கூற வேண்டும்.

எதிர்கால தலைமுறை, ஆரோக்கியமான, ஆற்றல் உள்ள தலைமுறையாக வளர்வதற்கு, இது தான் சிறந்த தீர்வாக அமையும்.இவ்வாறு, டிரேவர் பெய்லீஸ் கூறினார்.

No comments:

Post a Comment