Monday, January 20, 2014

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணம் செலுத்தும் செலுத்து சீட்டு,இயக்குனரின் அறிவுரைகள் மற்றும் பிற சேர்ப்பு படிவங்கள்:

புகைப்படத்துடன் 60 லட்சம் விடைத்தாள்: பிளஸ் 2 தேர்வுக்காக அச்சடிப்பு தீவிரம்

பிளஸ் 2 தேர்வுக்காக மாணவர் புகைப்படம், பதிவு எண்கள் உள்ளிட்ட பல விவரங்களுடன் 60 லட்சம் விடைத்தாள்களின் முதல் பக்க தாள் அச்சடிக்கும் பணி சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.

பொதுத் தேர்விலும், தேர்விற்குப் பின் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலிலும் எந்த குளறுபடியும் வரக்கூடாது என்பதற்காக பல புதிய திட்டங்களை தேர்வுத் துறை அமல்படுத்தி உள்ளது. இதில், விடைத்தாளில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மிகவும் முக்கியமானது. 

வழக்கமாக விடைத்தாளின் முதல் பக்கத்தில் பதிவு எண், பெயர், தேர்வு பாடத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மாணவர் கையால் எழுதுவர். இதில், மாணவர் எழுத்தில் தவறு பதிவு எண்களை நிரப்புவதில் தவறு என பல பிரச்னைகள் தொடர்ந்து வந்தன. இந்த பிரச்னைகளை முற்றிலும் நீக்கும் வகையில் வரும் பொதுத் தேர்வில் புதிய முறையில் விடைத்தாள் வழங்கப்படுகிறது.

அதன்படி, வெற்று விடைத்தாள் கட்டின் முதல் பக்க தாளில் மாணவர் வெறும் கையெழுத்து மட்டுமே போட வேண்டியிருக்கும். மற்றபடி மாணவரின் புகைப்படம், பதிவு எண், அன்றைய தேர்வு பாடம், எந்த மீடியம், தேர்வு மையத்தின் பெயர், தேதி உட்பட அனைத்து தகவல்களும் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு இருக்கும்.

இந்த முதல் பக்கத்தை தேர்வுக்கு சில நாட்களுக்கு முன் அந்த தேர்வு மையங்களில் வைத்து விடை எழுதுவதற்கான பக்கங்களுடன் சேர்த்து தைக்கப்படும். இதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

விரைவில் வினியோகம்
இதற்காக 60 லட்சம் விடைத்தாள்களுக்கு முதல் பக்க தாள் அச்சடிக்கும் பணி சென்னையில் நடந்து வருகிறது. ஒவ்வொரு தேர்வு மையம் வாரியாக அச்சடிக்கப்பட்ட விடைத்தாள் விரைவில் அனுப்பப்பட உள்ளது. இதேபோல், செய்முறை தேர்வு விவரங்களை பதிவு செய்யும் பணி தற்போது சாதாரண முறையில் நடக்கிறது. இதனால் செய்முறை தேர்வு பாடம், அவற்றுக்கான மதிப்பெண் விவரங்களை பதிவு செய்தல் போன்றவற்றிலும் தவறுகள் நடக்கின்றன. 

இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு படிவத்தை தயார் செய்து கம்ப்யூட்டர் மூலம் உரிய விவரங்களை பதிவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்

தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

 அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், மாநிலத்தில் 412 ஒன்றியங்களில், 3, 5, 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதித்து அறியும், அடைவுத்திறன் தேர்வு நாளை துவங்க உள்ளது. இதற்காக, ஒன்றியத்திற்கு ஒவ்வொரு வகுப்பிற்கும், 10 பள்ளிகள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில், 3 மற்றும் 5ம் வகுப்பிற்கு நாளை தமிழ், கணிதமும், 22-ல் ஆங்கிலமும், 8ம் வகுப்பிற்கு 23ல் தமிழ்,கணிதம், 24-ல் ஆங்கில தேர்வும் நடக்கும். தேர்வு அறைக்கு இரண்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒரு கண்காணிப்பாளர், ஆசிரியர் பயிற்றுனர் அல்லது சிறப்பு கல்வியாளர். இவர்கள் தான் பணிபுரியும் ஒன்றியத்திலிருந்து அடுத்த ஒன்றியத்தில் கண்காணிப்பாளராக இருக்க வேண்டும்.

 இரண்டாவது கண்காணிப்பாளராக ஆசிரியர் ஒருவர் செயல்படுவார்கள்.மாணவர்களுக்கு ஒரு வினாத்தாளும், ஆசிரியர்களுக்கு ஒரு வினாத்தாளும், தனித்தனியாக வழங்கப்படும்.மாணவர்கள், ஆசிரியர்களின் அடைவுத்திறன் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுக்கான கல்வி திட்டம் தயாரிக்கப்படும். மாணவர், ஆசிரியர் விடைத்தாள் மதிப்பீடு செய்து, மதிப்பெண்கள் இணையதளம் மூலம், பதிவேற்றம் செய்யப்படும், என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment