Sunday, July 7, 2013

news

* கடவுளிடம் உறுதியாகவும், தூய்மையாகவும், நம்பிக்கை உடையவனாகவும் இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும் 
அனைத்துவிதமான இடைஞ்சல்களும் மறைந்து போகும்.
* ஒழுக்கம் மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கத்தால் உருவாகிறது. பழக்கங்களால் தான் ஒழுக்கத்தை மேலும் சிறந்ததாகச் சீர்படுத்தி அமைக்க முடியும். 
* அனைத்துவிதமான அறிவும் மனிதனுக்குள் இருப்பதாக வேதாந்தம் கூறுகிறது, குறிப்பாக, சிறுவனிடமும் 
இருக்கிற அறிவையும் விழித்து எழும்படி செய்வது தான் ஆசிரியனுடைய கடமை.
* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, மற்றவர்கள் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி செய்யும் வகையில் அவர்களுக்கு உதவுவது.
* நல்லவர்கள் மற்றவர்களின் நன்மைக்காக மட்டும் வாழ்கிறார்கள், மற்றவர்களின் நன்மைக்காக அறிஞன் தன்னைத்தானே தியாகம் செய்ய வேண்டும், உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாகத்தான் என்னுடைய நன்மையை நான் பெற முடியும், இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.
விவேகானந்தர் 
மாணவர்களே நடத்தும் அங்காடி: அரசுப்பள்ளி அசத்தல்

            உடுமலை அருகே அரசுப்பள்ளி வளாகத்தில், மாணவர்களே அங்காடி அமைத்து நிர்வாக பணிகளையும் மேற்கொள்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

             உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமவராப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். படிப்பதோடு மட்டுமின்றி மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்க தன்னார்வலர்கள் மூலம் தேவையான இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்களும் வாங்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன. பசுமைப்படை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்புகளும் பள்ளியில் செயல்படுகின்றன.

            மாணவர்களின் நிர்வாகத்திறமையை வளர்க்கும் வகையில், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து பள்ளி வளாகத்திலேயே அங்காடி ஒன்றை துவங்கலாம் என ஆலோசித்து முடிவெடுத்தனர்.

                இதற்காக ஆசிரியர்கள் சார்பில் பங்களிப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு ஒரு அங்காடி ஒன்றும் துவங்கப்பட்டது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு 6,7,8 மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்காடியில், மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், காகிதம், வரைபட அட்டைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

                மற்ற குழந்தைகளுக்கு லாபம் இல்லாமல் அடக்க விலையிலேயே விற்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் சில அவசர தேவைகளுக்காக கடனாக பெற்றுக்கொள்ளலாம்; ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் தலையீடு இல்லாமல் கணக்கு பார்ப்பது முதல் பணத்தை பாதுகாப்பது வரை நிர்வாக ரீதியான அனைத்து பணிகளையும் மாணவர்களே மேற்கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

                    தேவையான பொருட்களை மாணவர்களே ஆசிரியர்கள் உதவியுடன் கொள்முதல் செய்கின்றனர். படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், காலை பள்ளி துவங்குவதற்கு முன்பு அரைமணி நேரம், மதியம் உணவு இடைவெளியின் போதும் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

            "மாணவர்களிடம் நிர்வாகத்திறன் மற்றும் தன்னம்பிக்கையினை சிறுவயதிலேயே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அங்காடித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இதை வெற்றிகரமாக இயக்கி வருவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது," என்கிறார் அங்காடி பொறுப்பாசிரியர் ஆலிஷ் திலகவதி.

                   "அங்காடித்திட்டத்தை மாணவர்கள் ஆர்வமுடன் செயல்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இத்திட்டம் மூலம் கிடைக்கும் லாபத்தொகை மட்டுமின்றி மாணவர்கள் சேமிப்பு திட்டம் மூலம் கிடைக்கும் தொகையினை கொண்டும், பெதப்பம்பட்டி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஒரு கணக்கு துவக்கி சேமித்து வைக்கப்பட்டு வருகிறது," என பெருமையுடன் தெரிவித்தார் பள்ளித் தலைமையாசிரியர் மணி.
 



            வேதியியலின் முக்கிய ஒரு உட்பிரிவாக விளங்குவது ஆய்வக வேதியியல். இதன் மூலம் இயற்கையிலிருக்கும் வேதிப்பொருட்களை ஆராய்ந்து, அதிலிருந்து தேவையான பொருட்களை பெற முடிவது இதன் சிறப்பு. 
 
         உலக வெப்பமயமாதல், இயற்கை சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை, வேதியியல் ஆய்வுகளினால் தடுக்கலாம்.

            பொதுவாக வேதியியல் ஆய்வகத்தில் ஒரு பொருளின் அடர்த்தி, அமிலத் தன்மை, அளவு மற்றும் வடிவம் ஆகியவை ஆராயப்படுகின்றன. மேலும் பொருளின் மூலக்கூறு, அணுக்களின் அளவு ஆகியவையும் கணக்கிடப்படுகின்றன.

                   வேதியியல் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு, ஆய்வக வேதியியல் படிப்பு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். வேதியியலில் பல்வேறு உட்பிரிவுகள் காணப்படுகின்றன. பகுப்பாய்வு வேதியியல், உயிர் வேதியியல், கனிம வேதியியல், மருத்துவ வேதியியல், கரிம வேதியியல், இயல்பியல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல் என பிரிவுகள் உள்ளன. இவை அனைத்திலும் ஆய்வக வேதியியலே முதன்மையானது. இவற்றில் ஏதாவது ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

தகுதி மற்றும் படிப்புகள்

                       ஆய்வக வேதியியல் பாடங்களை படிப்பதற்கு பிளஸ் 2வில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். டிப்ளமோ, இளநிலை, முதுநிலை, பொறியியல் ஆகிய படிப்புகள் ஆய்வக வேதியியலில் உள்ளன.

* பி.எஸ்சி., எலக்ட்ரோ கெமிஸ்ட்ரி
* எம்.எஸ்சி., எலக்ட்ரோ கெமிஸ்ட்ரி
* பி.டெக்., சர்பேஸ் கோட்டிங் டெக்னாலஜி
* எம்.டெக்., எலக்ட்ரோ  கெமிக்கல் இன்ஜினியரிங்
* எம்.டெக்., சர்பேஸ் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்

             பொதுவாக வேதியியல் படிப்புகள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. இவற்றில் உட்பிரிவுகள் இருக்கும் நல்ல கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து படிப்பது சிறப்பானதாக இருக்கும். இந்த படிப்புகளுக்கு வெளிநாடுகளில் சிறந்த நிறுவனங்கள் உள்ளன.

வேலை வாய்ப்புகள்

                    ஆராய்ச்சி பொறியாளர், தொழில் நுட்பவியலார், ஆலோசகர், ஆசிரியர் போன்ற வேலைவாய்ப்புகள் வேதியியல் படித்தவர்களுக்கு உள்ளன. அரசு நிறுவனங்களிலும் வேதியியல் படித்தவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய பணிகள் இருக்கின்றன. அறிவியல் ஆய்வகங்களில் வேதியியலாளர்களின் தேவை அதிகம். வெளிநாடுகளிலும் ஆய்வக ஆராய்ச்சியாளருக்கு நல்ல பணிவாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

              பொதுவாக வேதியியல் படிப்பு முடித்தவர்களுக்கான தேவை அதிகமாகத்தான் இருக்கிறது. இதனால் இந்த துறையில் ஆர்வமுள்ளவர்கள், வேதியியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
 
படிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்?

             ஒரு செயலை செய்யும் போது, அதற்கான சூழல் இல்லையெனில் அச்செயல் வெற்றி பெறாது. அதே போல படிக்கும் அறையும், ஒழுங்காக இல்லையெனில் ஆர்வம் ஏற்படாது.

             ஒரு செயலில் ஆர்வம் இருக்கும்பொழுது தான் கவனம் ஏற்படும். கவனம் என்பது இயற்கையிலேயே உள்ள ஆற்றல் அல்ல. நம்மால் வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு திறன். பொதுவாக, ஆர்வம் உள்ள விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். உதாரணமாக பாடல்கள், கிரிக்கெட் விளையாட்டு போன்றவை. இதே கவனம், படிக்கும் விஷயங்களில் வருவதில்லை. ஏனென்றால் பாடத்தில் இந்த ஆர்வம் இருப்பதில்லை.

            இயல்பான ஆர்வம் இல்லையெனில், நமது கவனத் திறன் 30 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை. அதேபோல், ஒரே நேரத்தில் இரண்டு செயல்களில் கவனம் செலுத்த முடியாது. இதற்கு விதிவிலக்காக, பழக்கப்பட்ட இயந்திரத் தனமன செயலையும், சிந்தனை சம்பந்தப்பட்ட செயலையும் சிறிது நேரம் ஒரே சமயத்தில் செய்யலாம்.

படிப்புச் சூழல் எப்படி?
                  படிப்புச் சூழலை எவ்வாறு அமைத்துக்கொள்கிறமோ, அதைப் பொறுத்துதான், படிக்கும் ஆர்வம் நிலைத்திருக்கும். பொதுவாக பலர் படுக்கையில் அமர்ந்துகொண்டு, படிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இம்முறையில் உற்சாகத்தோடு படிக்கச் சென்றாலும் கூட, சில நிமிடங்களில் தூக்கம் வந்துவிடுகிறது. இதற்குக் காரணம், சிறு வயதிலேயே நமது உடலும், மனமும் படுக்கை என்றவுடன் தூங்கும் இடம் என்று பழகிவிட்டது. எவ்வாறு தூங்குவதற்கு படுக்கை அறையும், "டிவி" பார்க்க தனி இடமும் இருப்பதுபோல், படிப்பதற்கு என்று தனி இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

படுக்கை அறையைப் பார்த்தவுடன் தூக்கம் வருவது போல, சமையல் அறையை பார்த்தவுடன் பசி உணர்வு தூண்டப்படுவது போல, படிக்கக்கூடிய இடத்தைப் பார்த்தவுடன் படிக்கும் ஆவலைத் தூண்டும்படி இடம் அமைய வேண்டும். ஒவ்வொரு முறையும் படிக்கக் கூடிய இடத்தைத் தேடுவதால் நேரம் விரயமாகிறது.

படிக்கும் இடத்தை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவை

* காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் நன்றாக இருக்க வேண்டும்.
* தேவையான வரைபடங்கள், முக்கிய குறிப்புகள் சுவரில் ஒட்டிவைத்துக் கொள்ளலாம்.
* இடையூறுகள் அதிகம் இல்லாத இடமாக இருக்க வேண்டும்.
* சுத்தமான இடமாக இருக்க வேண்டும்.
* படிக்கும் போது தேவையான பொருட்களை (பேப்பர், பேனா, பென்சில், தண்ணீர்) முதலிலேயே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இவற்றைத் தேடுவதால் நேர விரயம் மற்றும் மன உளைச்சல் ஏற்படும்.

இதையெல்லாம் பின்பற்றினால், படிப்பு தானாக வந்து விடும்.

SSA மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
            2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு 
2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மானியம் (School grant) வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் – வழிகாட்டுதல் குறிப்புகள் :




  அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கேற்றவாறு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை (Infrastructure) மேம்படுத்த பள்ளி மானியம் வழங்கப்படுகிறது. இம்மானியம் வழங்க மாவட்ட வாரியாக  2013-14ம் ஆண்டு வரைவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



 அனைத்து வகையான அரசு, ஊராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர், கள்ளர், சீரமைப்பு, வனத்துறை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு இம்மானியம் விடுவித்தல் வேண்டும்.



 அரசு நிதி உதவிபெறும் தனியார் நிர்வாகப் பள்ளிகளை பொறுத்த வரையில் மாவட்ட திட்ட அறிக்கையில் இப்பள்ளிகள் சேர்க்கப்பட்டு, நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டிருந்ததால் மட்டுமே பள்ளி மானியம் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும்.



 இம்மானியத்தை பயன்படுத்தி மேஜை, நாற்காலி, பீரோ, குடிநீர் பாத்திரம், பதிவேடுகள், சுவர் கடிகாரம், அலமாரிகள், எழுது பொருள்கள, மின்வசிறி, மின் விளக்குகள், தகவல் பலகை, கரும்பலகை, செயல் வழிக் கற்றல் அட்டைகள் வைக்கும் டிரேஸ், பாய்கள், தீயணைப்பான், தேசியக் கொடி, கயிறு, மைக், மின் அழைப்பான், உலக உருண்டை, தனிம வரிசை  அட்டவணை போன்றவை வாங்க, பள்ளி மானியத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த ஏதுவாக பள்ளி மானியத்திலிருந்து மாணவர்களுக்கு தேவையான கைபந்து, கால்பந்து, ஸ்கிப்பிங் கயிறுகள், சதுரங்க பலகை, கேரம் விளையாட்டு போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்திட வேண்டும், பொருட்கள் தரமானதாக இருத்தல் வேண்டும்.



தொடக்கப் பள்ளி மானியம் மற்றும் நடுநிலைப் பள்ளி மானியம் வழங்குதல் (Release of Primary School Grant and Upper Primary School Grant)



1. 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.5000/- வீதமும் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு

வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.7000/- வீதமும். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.12000/- வீதமும் வழங்கப்பட வேண்டும்.

2. கோடிட்ட காசோலையாக கிராமக் கல்வி குழு / பெற்றோர் ஆசிரியர் கழகம் /பள்ளி நிர்வாகக் குழுவின் பெயரில் வழங்கப்பட வேண்டும்.

3. நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு மேல் எக்காரணம் கொண்டும் மானியம் வழங்கக்கூடாது.

4. காசோலை பெறப்பட்ட உடன் வங்கியில் செலுத்தப்பட வேண்டும்.

பொருள் வாங்குதல் (Purchase of Materials)

1. அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவையான பொருள்களை கிராமக்

கல்விக்குழுவின் தீர்மானத்தின்படி வாங்கப்பட வேண்டும்.

2. பொருள்கள் வாங்க தேவைப்படும் பொழுது மட்டும் தேவைப்படும் அளவிற்கு வங்கியிலிருந்து தொகை எடுக்கப்பட வேண்டும்.

3. பொருள்கள் வாங்கியமைக்கான பற்றுச்சீட்டுகள் (Vouchers)  பெறப்பட்டு பத்திரமாக பராமரிக்கப்பட வேண்டும்.

4. தொகை பெறப்பட்டமை மற்றும் செலவு செய்யப்பட்டவை ரொக்கப் பதிவேட்டில் (Cash book) பதிவு செய்ய வேண்டும்.



5. பொருள்களின் விவரங்களை இருப்புப் பதிவேட்டில்  பதிவு செய்தல் வேண்டும். இருப்புப் பதிவவேட்டு பக்க எண் பற்று சீட்டில் பதியப்படவேண்டும்.



6. பள்ளித் தகவல் பலகையில் பள்ளி மானியத் தொகை பெறப்பட்ட விவரம் (தேதி, தொகை  உள்பட) எழுதப்பட்டிருத்தல் வேண்டும். பள்ளி மானியம் 



பயன்படுத்தியதைக் கண்காணித்தல்

(Monitoring the utilization of school grant)



1. மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்., வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (AEEO ) பள்ளி மானியம் பயன்படுத்தியதை கண்காணித்து உறுதி செய்தல் வேண்டும்.



2. இருப்புப் பதிவேட்டையும், ரொக்க பதிவேட்டையும், பள்ளி மானியப் பதிவேட்டையும் அலுவலர்கள் பார்வையிட வேண்டும்.



3. தேவையின் அடிப்படையில் மட்டுமே பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதா என்பதையும் வாங்கப்பட்டுள்ள பொருள்களின் தரத்தையும் உறுதி செய்தல் வேண்டும்.



4. பொருள்கள் வாங்கும் பொழுது மாணவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்ள  வேண்டும்.



பயன்பாட்டுச் சான்றிழ்கள் ஒப்படைத்தல்

(Submission of Utilisation Certificates)


1. பயன்பாட்டுச் சான்றிழ்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் மூலமாக வட்டார வளமையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.



2. பார்வையின் போது அலுவலர்களுக்கு காண்பிக்க வேண்டும்.



மாவட்டத் திட்ட அலுவலகம் (DPO)



1. ஆண்டு வாரியாக பள்ளி மானியம் வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் (தொடக்க வகுப்புகள், உயர்தொடக்க வகுப்புகள்) எண்ணிக்கை, வழங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, தொகை, காசோலை எண்கள் போன்றவை அடங்கிய பள்ளி மானியப் பதிவேடு (School Grant Register ), பராமரித்தல் வேண்டும்.



2. கிராமக் கல்விக் குழுக்களின் பெயரில் கோடிட்ட காசோலைகள் ஜுன்- ஜுலை மாதங்களில் வழங்கப்பட வேண்டும்.



3. காசோலை வழங்கும் பதிவேட்டில் (Cheque Issue Register), பதிவு செய்யப்பட வேண்டும் (காசோலை எண், நாள், கிராமக் கல்விக் குழுவின் பெயர் மற்றும் வங்கியின் பெயர்)



4. நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு மேல் எக்காரணம் கொண்டும் மானியம் வழங்கக்கூடாது.



5. பயன்பாட்டுச் சான்றிழ்கள் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களிடமிருந்தும் ஒன்றியம் வாரியாக ஒன்றியத்துக்கு ஒரு சான்றிழ்  வீதம் பெறப்பட வேண்டும்.



6. மானியங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும், பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதையும்பள்ளிகளுக்குச் சென்று கண்காணிக்க வேண்டும்.





வட்டார வள மையம் (BRC)



1. வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் ஒன்றிய அளவில் பள்ளி மானியப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.



2. ஒன்றிய அளவில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை  ஆகியவற்றை பதிவு செய்யப்படவேண்டும்.



3. பள்ளி மானியத் தொகை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது, என்ன என்ன பொருள்கள் வாங்கப்பட்டுள்ளன என்பதை பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு சரிபார்க்க  வேண்டும்.



4. பள்ளி மானியம் பெற்ப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிடமிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்பட வேண்டும்.



5. பள்ளி மானியம் வழங்கப்பட்ட அனைத்து பள்ளிகளிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்பட்டுவிட்டதை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய அளவில் ஒரே பயன்பாட்டுச் சான்றிதழில் பள்ளி மானியம் வழங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை (தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி), தொகை குறிப்பிட்டு மாவட்டத் திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப் படவேண்டும்.



பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மையம் (CRC)

1. ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மைய அளவில் பள்ளி மானியப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.



2. பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு மைய அளவில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றம் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்யப்படவேண்டும்.



3. பள்ளி மானியத் தொகை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது. என்ன என்ன பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன என்பதை பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு சரிபார்க்க வேண்டும்.



4. பள்ளி மானியம் பெறப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிடமிருந்தும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறப்படவேண்டும்.



5. மேலும் மைய அளவிலுள்ள அனைத்து பள்ளிகளையும் பார்வையிடுதல் மற்றும் பயன்பாட்டுச் சான்றிழ்கள் பெறுதல் ஆசிரியர் பயிற்றுநரின் முழுப்பொறுப்பாகும்.



கிராமக் கல்விக் குழு / பள்ளி மேலாண்மைக் குழு

1. அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவையான பொருள்கள் கொள்முதல் செய்ய  தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.



2. பொருள்கள் வாங்கியமைக்கான பற்றுச் சீட்டுகள் ( Voucher  ) பெறப்பட்டு பத்திரமாக  பாதுகாக்கப்பட வேண்டும்.



3. இருப்புப் பதிவேட்டில் வாங்கப்பட்ட பொருள்களின் பெயர், தொகை, ரசீது எண். நாள்,  வாங்கிய இடம் முதலியவை பதிவு செய்தல் வேண்டும். இப்பக்க எண்ணை பற்றுச்  சீட்டில் குறித்து இருப்புச் சான்று பதிய வேண்டும்.



4. பள்ளி மானியப் பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும். (பெற்ற தொகை, காசோலை  எண். வங்கி மற்றும் நாள்).



5. பள்ளித் தகவல் பலகையில் பள்ளி மானியம் தொகை பெறப்பட்ட விவரம் (தேதி தொகை உட்பட) எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.



6. பயன்பாட்டுச் சான்றிழ் ஆசிரியர் பயிற்றுநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இச்சுற்றறிக்கையின் நகலினை மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கீழ்கண்ட அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்புதல் வேண்டும். சுற்றறிக்கை பெறப்பட்டதற்கான  ஒப்புகைச் சான்றிழ் பெற்று தங்கள் அலுவலகக் கோப்பில் வைத்திருத்தல் வேண்டும்.

(இவ்வாறு மாநில் திட்ட இயக்ககம் செயல்முறை வெளியிட்டுள்ளதாக அறியப்படுகிறது.)
Current events

No comments:

Post a Comment