Sunday, March 31, 2013


ஐஐடிக்களில் 43% காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள்

ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கு மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கல்வித் தரம் முன்னேறி வந்தாலும், உலக அளவில் போட்டி போடும் அளவுக்கு இன்னமும் வளரவில்லை. உலக அளவில் மாணவர்களை தயார் படுத்த உருவாக்கப்பட்டவையே ஐஐடி மற்றும் என்ஐடிக்கள். ஆனால், அவையும் எதிர்பார்த்த முன்னேற்றத்தைத் தரவில்லை.

இந்த நிலையில், ஐஐடி மற்றும் என்ஐடிக்களில் 40 சதவீதத்துக்கும் மேல் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது புதிதாக துவங்கப்பட்ட ஐஐடிக்களில் அல்ல. துவங்கி பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஐஐடிக்களுக்கும் இதே நிலைதான். இதிலும் என்ஐடிக்களின் நிலை மிகவும் மோசம். இங்கு 57 சதவீதம் அளவுக்கு பேராசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உளளது. பொதுவாக மாணவர்கள் புதிய ஐஐடிக்களை விட, பழைய ஐஐடிக்கள் தான் கல்வியை நல்ல முறையில் தரும் என்று நம்புவார்கள். இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட 8 ஐஐடிக்களில் 4ல், போதிய பேராசிரியர்கள் பணியாற்றி நல்ல முறையில் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியார் பல்கலையில் நாளை பி.எட்., நுழைவுத்தேர்வு


கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில். பி.எட்., நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது.
பாரதியார் பல்கலையில் பி.எட்., படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நாளை கடலூர், வில்லுபுரம், தஞ்சாவூர், நாகர்கோவில், திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே, அவரவர் வீட்டு முகவரிக்கு நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்பவர் அரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு அறைக்கு வர வேண்டும் என்று பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
அரிதான நாணயங்கள் கிடைத்தால் உதாசீனப்படுத்தாதீர்"




        "அரிதான நாணயங்கள் ஏதேனும் கிடைத்தால், அதை, தயவு செய்து நாணய ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களின் கவனத்திற்கு, கொண்டு செல்லுங்கள். பழைய நாணயங்களை உதாசீனப்படுத்தி, தமிழகத்தின் வரலாற்றை அழித்து விடாதீர்கள்" என, "தினமலர்" நாளிதழ் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

          "மெட்ராஸ் காயின் சொசைட்டி" அமைப்பின் சார்பில், "நாணய கண்காட்சி 2013" ராஜா அண்ணாமலைபுரம், குமார ராஜா முத்தையா அரங்கில் நேற்று துவங்கியது. "மெட்ராஸ் காயின் சொசைட்டி" தலைவர் வைத்தியநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

           "தினமலர்" நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நாணய கண்காட்சியை, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:

              தமிழகத்தை பொறுத்தவரை, காசு இயல் அல்லது நாணயவியல் பற்றி, 1984ம் ஆண்டிற்கு பின் தான், வெளியில் தெரிய துவங்கியது. அதற்கு முற்பட்ட காலத்தில், தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்கள் அனைத்தும், ராஜ ராஜன் காலத்து நாணயங்கள் குறித்து, ஏதோ ஒரு பக்கத்தில் மட்டும், தகவல் எழுதியிருப்பர்.

               கடந்த, 1984ம் ஆண்டு, நான் மதுரையில் ஒரு நாணயவியல் வியாபாரியிடம், ஒரு சதுர காசை விலைக்கு வாங்கினேன். அதன் முன்புறம் குதிரை இருந்தது. அதன் மேல், "பெருவழுதி" என்று, தமிழ் பிராமி எழுத்து முறையில் குறிக்கப்பட்டிருந்தது. பின்புறம், கோட்டு வடிவத்தில், மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

             "பெருவழுதி" என்ற பெயர், சங்க கால இலக்கியமான, புறநானூற்றில் உள்ளது.
 
                முதன் முதலாக, "பெருவழுதி" என்ற பெயர் பொறித்த, நாணயம் கிடைத்த பிறகு தான், சங்க காலத்தில் மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டனர் என்ற கீர்த்தி வெளிவந்தது.

                    உருக்கு ஆலைக்கு விற்றனர்: அதற்கு முன், வரலாற்று நூல் ஆசிரியர்கள், "சேர, சோழ, பாண்யர்கள், சிறு வட்டத்தில் ஆண்ட மன்னர்கள்; அவர்களுக்கு நாணயம் வெளியிடும் தொழில்நுட்பம் கிடையாது; அவர்களுக்கு நாணயத்தின் தேவையும் கிடையாது; பண்ட மாற்று முறைதான் இருந்தது" என்று கூறி வந்தனர்.

              ஆனால், இந்த "பெருவழுதி" நாணயம் கிடைத்த பிறகு, அந்த கூற்று மாற்றப்பட்டது. 1987ம் ஆண்டு, கரூர், அமராவதி ஆற்றில் இருந்து, ஏராளமான, பிற்காலத்திய ரோம நாட்டு செப்பு நாணயங்கள், கிரேக்க நாட்டு நாணயங்கள், சேரர் நாணயங்கள் கிடைத்தன.

                  தகவலறிந்து, நான் அங்கு சென்று பார்த்த போது, கரூர் பஜாரில் உள்ள, சிறு சிறு பாத்திரக் கடைகளில் எல்லாம், அவற்றை குவித்து வைத்திருந்தனர். அந்த நாணயங்கள் குறித்து கேட்ட போது, அவர்கள், "கடந்த ஒரு மாதமாக கிடைக்கிறது. இவற்றில், ஐந்து டன் நாணயங்களுக்கும் மேலாக, திருப்பூர் உருக்கு ஆலைக்கு அனுப்பி வைத்து விட்டோம்" என்று கூறினர்.

              அதைக் கேட்டதும் நான், அளவில்லாத துக்கம் அடைந்தேன். முதன் முதலாக, அங்கு தான், சங்க கால சேரர் நாணயங்கள் கிடைத்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சோழர், பாண்டிய, மலையமான் காலத்து நாணயங்களும் கிடைத்து விட்டன.

               கரூரில் கிடைத்த, பிற்காலத்திய ரோம நாட்டு செப்பு நாணயங்கள், கி.பி., 5ம் நூற்றாண்டை சேர்ந்தவை. அந்த நாணயங்களை சுத்தம் செய்து, ஆய்வு மேற்கொண்டு, நூல் எழுதினேன். அதற்கு முன் இந்தியாவில், அது குறித்து யாரும் நூல்கள் எழுதவில்லை.

                 பீட்டர் பர்கேஸ் என்ற, ஜெர்மன் பேராசிரியர், என் நண்பர். நான், 1985ம் ஆண்டு முதல், தமிழ்நாடு நாணய சங்கம் ஆரம்பித்து, நடத்தி வந்தேன். ரோம நாட்டு நாணயங்கள் குறித்து, கருத்தரங்குகள் பல நடத்தினேன். பிற்காலத்திய, ரோம நாட்டு செப்பு நாணயங்கள் குறித்த புத்தகங்கள் எதுவும், எழுதப்படவில்லை.

                   ஆனால், பீட்டர் பர்கேஸின் மாணவர் ஒருவர், இலங்கையில் கிடைத்த ரோம நாட்டு நாணயங்கள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொண்டு புத்தகங்கள் எழுதினார். அவருக்கு என்னிடம் இருந்த நாணயங்களின் புகைப்படங்களை அனுப்பி, "அவை எந்த காலத்து நாணயங்கள் என்று அடையாளம் காட்டினால், அது குறித்த கட்டுரை எழுத, வசதியாக இருக்கும்" என, கடிதம் எழுதினேன்.

               அதற்கு அவர் எழுதிய பதிலில், "உங்களுக்காக நான் எனது நேரத்தை செலவிட வேண்டுமா? இனி இதுபோன்ற கடிதங்களை எழுதாதீர்" என்று கூறியிருந்தார். என் வாழ்நாளில், அது போன்ற அவமானம் அடைந்ததில்லை.
இருப்பினும் விடாப்பிடியாக, பிற்கால ரோம நாட்டு நாணயங்கள் குறித்து எழுத வேண்டும் என்ற ஆசையில், ஆக்ஸ்போர்டு பல்கலை பேராசிரியர் ஒருவரை, தொடர்பு கொண்டேன். லண்டன் சென்று, அவரை சந்தித்தேன். அங்கிருந்த 150 ஆண்டு பழைமை வாய்ந்த இங்கிலாந்து நாட்டு நாணயவியல் சங்க நூலகத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு நூலை என்னிடம் காண்பித்தார்.

                அது ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருந்தது. அந்த நூலின் பெயரை எழுதி கொண்டு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நூலகத்திற்கு சென்று, என் நண்பர்கள் உதவியுடன், அந்த நூலின் புகைப்பட பிரதி ஒன்றை பெற்று, இந்தியா திரும்பி, அது குறித்த நூலை எழுதினேன்.

                 அது தான், நாணயம் குறித்த, என் முதல் ஆங்கில நூல். அந்த நூல், மிக பிரபலமானது. தென்னிந்திய நாணய சங்கம் ஆரம்பித்தோம். அது தமிழகம் முழுவதும், கிளைகளுடன் வளர்ந்துள்ளது.

                 இப்போதெல்லாம், பழங்கால நாணயங்களே வாங்க முடியாது; நல்ல விலைக்கு போகிறது. நான் வைக்கும் ஒரே கோரிக்கை இது தான். உங்களிடம், அரிதான நாணயங்கள் ஏதேனும் கிடைத்தால், அவற்றை தயவு செய்து, நாணயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களிடம் காண்பியுங்கள். அல்லது அவற்றின் புகைப்படங்களையாவது கொடுத்து, ஆராய சொல்லுங்கள்.

                பழைய நாணயங்களை உதாசீனப்படுத்தி, தமிழகத்தின் வரலாற்றை அழித்து விடாதீர்கள். இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
பிரிகேடியர் பாக்கியநாதன் பேசுகையில், "இந்த சொசைட்டி, 1991ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதற்கு முன்பாக துவங்கியிருந்தால், நானும் கண்காட்சியில் கலந்து கொண்டிருப்பேன். நான், நாணயங்களின் மகத்துவம் அறிந்தவன். இந்த நாணயங்களை சேகரித்து பாதுகாப்பதன் மூலம், நமது பாரம்பரியத்தையும் காப்பாற்றுகிறோம்" என்றார்.

                  "மெட்ராஸ் காயின் சொசைட்டி" தலைவர் ராவ், நன்றி கூறினார். நேற்று துவங்கிய இந்த கண்காட்சி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், 65 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
 
                  அவற்றில், பழங்காலத்து நாணயங்கள், பல நாடுகளின் கரன்சிகள், பழங்காலத்து பொருட்கள் உள்ளிட்டவை, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நாணயங்களை சேகரிக்கும் மாணவ, மாணவியருக்கு, இந்த கண்காட்சி, மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கல்லூரிகளை உடனே திறக்க மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்


           "மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும்" என, மாணவர்கள் கூட்டமைப்பினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


          தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாரிமைந்தன் கூறியதாவது: போராட்டங்களால், மாணவர்களின் படிப்பு, ஒரு சதவீதம் கூட, பாதிக்க கூடாது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அமைதியான முறையில், எங்களின் போராட்டத்தை தொடருவோம். 

             கடந்த 1976ம் ஆண்டு, மே 14ம் தேதி, செல்வா தலைமையில், தனி ஈழம் அமைய வேண்டும் என, வலியுறுத்தி, வட்டு கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்லூரி தேர்வுகள் முடிந்த பின், அந்த சிறப்புமிக்க நாளிலிருந்து, எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

              தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோ பிட்டோ: கல்லூரிகளை திறக்க வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்த, 20 நாட்களாக மாணவர்கள் அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டசபையில், இலங்கைக்கு எதிராக, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

          இது போன்று பார்லிமென்டிலும், தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். எங்களின் அறவழி போராட்டம் படிப்புக்கும், பொதுமக்களும் பங்கம் விளைவிக்காத வகையில், நூதன முறையில் தொடரும்.

             தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் இளையராஜா: கல்லூரிகளை அரசு முடக்க கூடாது; எங்களின் போராட்டத்தால், மாணவர்களின் படிப்பும், தேர்வுகளும் பாதிக்காது. மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், போராட்டங்களை தொடருவோம்.

               ஈழ தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கணேசன்: மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு உடனே கல்லூரிகளை திறக்க வேண்டும். எங்கள் போராட்டம் மாணவர்களை பாதிக்காது.

இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் மாணவர்கள்
 
          தமிழகத்தில் அரசு பொது தேர்வு வினாத்தாள் கண்காணிப்பு குழுவில், மாணவர்களும் இந்தாண்டு முதல், சேர்க்கப்பட்டுள்ளனர்.

        பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வின் போது இதுவரை, வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இருந்து, தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் பண்டல்கள் எடுத்துச் செல்லப்பட்டு, முதன்மை கண்காணிப்பாளர் (தலைமை ஆசிரியர்) மற்றும் துறை அலுவலர் (மூத்த ஆசிரியர்) முன்னிலையில் பண்டல்களை பிரிப்பது வழக்கம். 

             ஆனால், இந்தாண்டு முதல், வினாத்தாள் கண்காணிப்பு குழுவில் ஒரு மாணவரையும் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, வினாத்தாள் பண்டல் பிரிக்கப்பட்டவுடன், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மாணவர் ஒருவரும் கையெழுத்திட வேண்டும் என்று தேர்வுதுறை உத்தரவிட்டுள்ளது.

                    மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த முறையை தற்போது நடக்கும் பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் இருந்து, தேர்வு துறை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது தேர்வு துறையின் வெளிப்படை தன்மையும், நம்பகத்தன்மையையும் மாணவர்கள் மற்றும் மக்களிடையே ஏற்படுத்த வழிவகுக்கும். வரவேற்கத்தக்கது" என்றார்.
"விடைத்தாள் சேதமான விவகாரத்தில் தேர்வுத்துறை மீது தவறில்லை"

         "விடைத்தாள், ரயில் பாதையில் கிடந்த விவகாரத்தில், தேர்வு துறையின் தவறுகள் எதுவும் இல்லை" என அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.


          விருத்தாசலம் அருகே, 10ம் வகுப்பு விடைத் தாள்கள், ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த விவகாரம் குறித்து, விசாரணை நடத்திய, சி.இ.ஓ., ஜோசப் அந்தோணிராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

        பி.முட்லூர் தேர்வு மையத்தில், 545 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். ஒரு பாக்கெட்டில், 15 விடைத் தாள்கள் வீதம் வைக்கப்பட்டது. 545 விடைத் தாள்களையும், மூன்று பண்டல்களாக பிரித்து, மலைக்கோட்டை ரயிலில் அனுப்பப்பட்டது. அதில், 177 விடைத் தாள்கள் கொண்ட பண்டல், கீழே விழுந்து சேதமடைந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.

          விடைத் தாள்கள் சேதமடையவில்லை. எரிக்கப்பட்டதாக கூறுவது குறித்து எதுவும் தெரியவில்லை; விசாரணை செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

              இந்நிலையில், "விருத்தாசலத்தில் 10ம் வகுப்பு விடைத் தாள் சேதமடைந்தது குறித்து, முழுமையான விவரங்கள் கிடைத்ததும், உரிய முடிவு எடுக்க, அறிவிக்கப்படும்" என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன், நேற்று இரவு கூறினார்.

                இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு தமிழ் விடைத்தாள் கட்டு, ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில், தேர்வு துறையின் தவறுகள் எதுவும் இல்லை. ரயிலில் கட்டுகளை அனுப்பும் போது, என்ன நடந்தது என்பது குறித்து, முழுமையான விவரம் கிடைக்கவில்லை.

             அனைத்து விடைத்தாள்களும் சேதமடைந்ததா அல்லது ஒரு சில விடைத்தாள்கள் சேதமடைந்ததா என்பது விசாரணைக்கு பின் தெரியவரும். கல்வித் துறை அதிகாரிகள் சம்பந்தபட்ட இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர். முடிவு கிடைத்ததும், இறுதி முடிவு எடுத்து அறிவிக்கப்படும்; சேதமடைந்திருந்தால், இதற்கு முன், அதன் அடிப்படையில், உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்
           பார்சலில் அனுப்பப்பட்ட, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத் தாள்கள், ரயில் பாதையில் சிதறிக் கிடந்ததால், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

              தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இம்மாதம் 27ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம், 28ம் தேதி, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பி.முட்லூர் மையத்தில், தமிழ் இரண்டாள் தாள் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும், பி.முட்லூர் தபால் அலுவலகம் மூலம், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நாடிமுத்து நகர் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

               இதே போன்று, மாவட்டத்தின் பல்வேறு தபால் நிலையங்களில் இருந்து அனுப்பப்பட்ட, 91 விடைத்தாள் பண்டல்கள், விருத்தாசலம், "ரயில்வே மெயில் சர்வீஸ்" (ஆர்.எம்.எஸ்.,) அலுவலகத்தில் இருந்து, சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவு, 2:30 மணிக்கு ஏற்றினர்.

               இதை, "மெயில் கார்டுகள்" கதிர்வேல், பழனிவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நேற்று காலை, திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் விடைத்தாள் பார்சல்களை இறக்கிய போது, விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்ட, 91 பண்டல்களில் ஒன்று குறைந்தது.

                விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., அலுவலகம் மற்றும் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள், ரயில் பாதையில் சென்று பார்த்த போது, விருத்தாசலம் ஜங்ஷனில் இருந்து திருச்சி மார்க்கத்தில், 300 மீட்டர் தூரத்தில் உள்ள நாச்சியார்பேட்டை அருகே, விடைத்தாள் பண்டல் ஒன்று முற்றிலும் சேதமடைந்து கிடந்தது.
விருத்தாசலம் ஜங்ஷனில் இருந்து ரயில் புறப்பட்ட சற்று நேரத்தில், 
           
               விடைத்தாள் பார்சல் கீழே விழுந்துள்ளது. இதை ஊழியர்கள் கவனிக்காததால், அதைத் தொடர்ந்து, சென்னை சென்ற ராமேஸ்வரம், கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் விடைத்தாள் மூட்டை மீது ஏறிச் சென்றதில், விடைத்தாள்கள் முற்றிலுமாக சேதமடைந்து, குப்பை போல் காணப்பட்டது. அதை ஆர்.எம்.எஸ்., மற்றும் ரயில்வே ஊழியர்கள் சேகரித்தனர்.

                     சேகரிக்க முடியாத நிலையில் இருந்த பேப்பர்களை ஒரே இடத்தில் குவித்து தீயிட்டு எரித்தனர். விடைத்தாள் பண்டல், ரயிலில் இருந்து கீழே விழுந்து சேதமடைந்த தகவலை அறிந்து, திருச்சி கோட்ட அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் சங்கர், நேற்று மதியம், 12:00 மணிக்கு விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும், கல்வித் துறை இயக்குனர் வசுந்தராதேவி, விருத்தாசலத்திற்கு விரைந்தார்.

No comments:

Post a Comment