Sunday, April 7, 2013

"விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்"

          "பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை தபால் அலுவலகம் மூலம் அனுப்பும் பணியின் போது கல்வி அதிகாரிகளுடன், பறக்கும் படை ஆசிரியர் களும் கடைசி நிமிடம் வரை இருந்து கண்காணிக்க வேண்டும்" என்று, மதுரை மாவட்ட தேர்வு பார்வையாளர் சங்கர் (டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர்) தெரிவித்துள்ளார்.

        மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான, பறக்கும் படை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள், பறக்கும் படையை சேர்ந்த 130 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

          மதுரை மாவட்ட தேர்வு பார்வையாளர் சங்கர் அறிவுறுத்தியதாக ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: விடைத் தாள்களை சம்பந்தப்பட்ட திருத்தும் மையங்களுக்கு அனுப்பும் போது துறை அலுவலர், கூடுதல் அலுவலருடன் இனிமேல் பறக்கும் படை பிரிவு ஆசிரியர்களும் கடைசி நிமிடம் வரை இருந்து கண்காணிக்க வேண்டும். பண்டல்கள் "மிஸ்" ஆகாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

          தபாலில் அனுப்பப்பட்ட பண்டல்களின் எண்ணிக்கை குறித்து, "கஸ்டோடியன்" மையங்களுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.

             ஆலோசனை கூட்டத்தில் சங்கர் பேசுகையில், "மதுரையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் இதுவரை மாணவர்கள் "பிட்" எழுதியதாக புகார் இல்லை. இது ஆரோக்கியமானது. பொது தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு நடத்தும் தேர்வுகளில் "பிட் கலாசாரம்" இல்லை என்றால், பொது தேர்விலும் "பிட்" பிரச்னை வராது" என்று அறிவுறுத்தினார்.

விடைத்தாள் சேதமான விவகாரம்: அஞ்சல்துறை விஜிலன்ஸ் ஆய்வு

               பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் சேதமடைந்தது தொடர்பாக, விருத்தாசலம் ரயில் நிலையத்தில், அஞ்சல் துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

                கடலூர் மாவட்டம், பி.முட்லூர் மையத்தில், மார்ச், 28ம் தேதி, 10ம் வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், 29ம் தேதி நள்ளிரவு, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அனுப்பப்பட்டன.
விருத்தாசலம் ரயில் நிலையம் அடுத்த, நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் அருகே, ஒரு பண்டல் விடைத்தாள்கள் கீழே விழுந்து சேதமாகின. இது தொடர்பாக, திருச்சி, ஆர்.எம்.எஸ்., ஊழியர்கள் பாலு, ரவி, ஜெயக்குமார், மாலிக் ஆகியோர், "சஸ்பெண்ட்" செய்யப்பட்டனர்.

          இந்நிலையில், அஞ்சல் துறை திருச்சி விஜிலன்ஸ் அதிகாரிகள், விருத்தாசலம் ரயில் நிலையத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்டு, ரயில் நிலையத்திலிருந்து, விடைத்தாள் பண்டல் விழுந்த இடம் வரை, அளவீடு செய்தனர்.

              அதில், 348 மீட்டர் தூரத்தில், விடைத்தாள் பண்டல் விழுந்துள்ளது தெரிய வந்தது. மேலும், விசாரணை தொடர்பான கோப்புகளுடன், விஜிலன்ஸ் அதிகாரிகள், ஆய்வு செய்து சென்றனர்.

மாயமான 10ம் வகுப்பு விடைத்தாள்: மறுதேர்வு நடக்குமா? - Dinamalar

          "பள்ளி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போக்குவரத்து முறை நவீனப்படுத்தப்படும்" என, கல்வி அமைச்சர் துறை அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.


       சட்டசபையில், பள்ளி தேர்வு வினாத்தாள் வெளியானது மற்றும் விடைத்தாள் காணாமல் போனது குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது, எம்.எல்.ஏ.,க்கள் பேசியதாவது:

மார்க்சிஸ்ட் - பாலகிருஷ்ணன்: தேர்வு விடைத்தாள்கள், தனியார் பேருந்து மற்றும் தபால்துறை மூலம் அனுப்பப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், கடைநிலை ஊழியர்களை பயன்படுத்தலாமா; பொதுத் தேர்தல்களில் பின்பற்றும் முறை போன்று, வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்.

பலரும் கோரிக்கை: இதே போன்ற கோரிக்கையை, புதிய தமிழகம் -கிருஷ்ணசாமி, காங்கிரஸ் - பிரின்ஸ், மனித நேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் - குணசேகரன், தி.மு.க., - அன்பழகன் ஆகியோர் முன்வைத்தனர்.

           பள்ளி கல்வி துறை அமைச்சர் வைகை செல்வன் பதிலளித்து பேசியதாவது: நாமக்கல், காமராஜர் மேல்நிலை பள்ளி, தேர்வு மையத்தில், மார்ச், 3ம் தேதி, பிளஸ் 2 இயற்பியல் தேர்வு நடந்தது. கல்வி நிறுவன அலுவலக ஊழியர்கள், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை, தேர்வர்களுக்கு காட்ட முயற்சித்தனர்.

         இதை அரசின் சிறப்பு பறக்கும் படை தடுத்துள்ளது. இந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதிய, அனைத்து மாணவர்களின் விடைத்தாள்களும், அரசு தேர்வுகள் இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு, தேர்வு துறை அலுவலர்கள் முன்னிலையில், மதிப்பீடு செய்யப்படும்.

             இத்தேர்வு மையத்தில், அடுத்தடுத்த தேர்வுகள் நடக்க, தடை செய்யப்பட்டு உள்ளது. தற்காலிகமாக, செல்லப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், மாணவர்கள் தேர்வெழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தேர்வுகள் நடந்தன. இதுகுறித்து, முழு விசாரணை நடத்த, டி.ஜி.பி., யிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பயப்பட தேவையில்லை.

வினாத்தாள் குறைபாடு: மார்ச், 28ம் தேதி நடந்த, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில், 38வது வினாவிற்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சி செய்தாலே, அதற்குரிய ஐந்து முழு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேபோல், ஆங்கிலம் இரண்டாம் தாளில், பிரிவு ஒன்றில், வினா எண் 3ல் கேட்கப்பட்ட வினாக்கான விடை தவறாக எழுதியிருந்தாலும், அதற்குரிய மதிப்பெண் வழங்க விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

காணாமல் போனது: விடைத்தாள் கட்டுகள், ரயில்வே மெயில் சர்வீஸ் மற்றும் பேருந்து வாயிலாக, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இம்முறை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்படுகிறது. மலைக்கோட்டை விரைவு ரயில், திருப்பத்தில் திரும்பும் போது, இரண்டு வினாத்தாள் கட்டுகள் விழுந்துள்ளன.

           விரிவான விசாரணைக்கு பின், நான்கு தபால் துறை அலுவலர்கள், "சஸ்பெண்ட்" செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சேதமடைந்த, தமிழ் இரண்டாம் தாள், 63 விடைத்தாள்களுக்கு, தமிழ் ஒன்றாம் தாளில் பெற்ற மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்ச்சிக்குரிய மதிப்பெண் இல்லாத விடைத் தாள்களுக்கும், குறைந்த அளவு தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள் வழங்கப்படும்.
செஞ்சி சத்தியமங்கலம், மேல்பாப்பாம்பாடி மற்றும் ராஜா தேசிங்கு மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், தேர்வெழுதிய, 221 மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமாகி உள்ளன. குடிபோதையில் இருந்த ஊழியரால், இரண்டு கட்டுகள் தொலைக்கப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

             இந்த இரண்டு சம்பவங்களிலும், தபால் துறையின் அலட்சிய போக்கே காரணம் என தெரிய வந்துள்ளது. போக்கு வரத்தின் போது சேதமடைந்த மற்றும் காணாமல் போன விடைத்தாள்களுக்கு, மதிப்பெண் வழங்கப்படும். மாயமாகி போன விடைத்தாளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்தலாமா என்பதை பரிசீலித்து வருகிறோம்.

              எதிர்காலத்தில், பள்ளி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லும் போக்குவரத்து முறை நவீனப்படுத்தப்படும். இது தொடர்பாக, முதல்வரிடம் ஆலோசித்து, விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
 
"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"

         "இணையதள தகவல்களை நம்பி, வெளிநாடுகளில் படிக்க செல்ல கூடாது" என, வெளிநாட்டு படிப்புக்கான மையம் நடத்தும் பால் செல்லக்குமார் கூறினார்.

          சென்னையில் நேற்று நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "வெளிநாட்டில் மேற்படிப்புக்கான சாதக, பாதகங்கள்" குறித்து அவர் பேசியதாவது:

          கடந்த 1970ல், 10 சதவீதம் மாணவர்கள், சொந்த செலவில் வெளிநாட்டு சென்று கல்வி கற்றனர். தற்போது, 90 சதவீதம் மாணவர்கள் சொந்த செலவிலும், 10 சதவீதம் பேர் வங்கி கடனில், படிக்க செல்கின்றனர். வெளிநாட்டு சென்று கல்வி கற்கும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும், இரண்டு லட்சம் பேர், உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர்.

             சீனாவுக்கு அடுத்து, இந்தியர்கள் தான் அதிகமாக, வெளிநாடு சென்று படிக்கின்றனர். வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மோசமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. வெளிநாட்டு சென்று படிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழகங்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தால் மட்டுமே, 100 சதவீத வேலை கிடைக்கும்.

             வெளிநாட்டு பல்கலைக்கழகம் குறித்து, இணையதளங்களில் தரும் தகவல்களை நம்பி, வெளிநாடு செல்ல கூடாது. பல்கலைக்கழகம் குறித்து முழுவதும் விசாரித்து விட்டு செல்ல வேண்டும்.

        ஐ.ஏ.எஸ்., தேர்வை, 5 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர், மெயின் தேர்வுக்கு செல்கின்றனர். ஐ.ஐ.டி.,யில், 4.50 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஐ.ஐ.எம்.,ல் 2 லட்சம் பேர் எழுதி, 1.5 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர்.

          ஜப்பானில், 4,000 பல்கலைக்கழகமும், அமெரிக்காவில் 3,700 பல்கலைகழகமும், சீனாவில் 2,500 பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆனால், இந்தியாவில் 560 பல்கலைகளே உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தகுதியான பல்கலைக்கழகங்கள் இல்லை.

              அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், இளங்கலை பட்டம் படிக்க, 15 லட்சம் வரையும், முதுகலை பட்டம் படிக்க, 40 லட்சம் ரூபாய் வரையும் செலவாகிறது. பிரான்ஸ், ஹங்கேரி பான்ற நாடுகளில், கல்விக் கட்டணங்கள் குறைவு. இவ்வாறு, பால் செல்வக்குமார் பேசினார்.

         "பயோ டெக்னாலஜி மற்றும் பயோ இன்ஜினியரிங்" படிப்புகள் குறித்து, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை, பயோ டெக்னாலஜி துறை தலைவர் ரமா வைத்தியநாதன் பேசியதாவது:

           உயிரிலையும், தொழில்நுட்பத்தையும் இணைந்து செயல்படும் அறிவியலின் பிரிவே பயோ டெக்னாலஜி. செல்களையும், பாக்டீரியாக்களைவும் தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த பயோ டெக்னாலஜி உதவுகிறது. மரபியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, இம்யூனாலஜி, வைராலஜி, வேதியியல், பொறியியல் போன்ற பல தரப்பட்ட பாடங்கள் உள்ளன.

      கடந்த 10 ஆண்டுகளாக இத்துறை அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருகிறது. பயோ டெக்னாலஜி ஆராய்ச்சியில், இந்தியா 12வது இடத்தில் உள்ளது. வேதியியல், டெக்ஸ்டைல்ஸ், லெதர், மருத்துவம், பொறியியல், உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கு அடிப்படையாக பயோ டெக்னாலாஜி உள்ளது. இவ்வாறு, ரமா வைத்தியநாதன் பேசினார்.

கப்பல் படிப்பில் சாதிக்கலாம்: 
              கடல்சார் அறிவியல் படிப்பில் வாய்ப்புகள் குறித்து, நரசய்யா பேசியதாவது: ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்நாட்டின் வணிகத்தை பொறுத்துள்ளது. வணிகம் செய்ய, கடல் வழி போக்குவரத்து சிறப்பானது. சேரர், சோழர், பாண்டியர் வாழ்ந்த காலத்தில், தமிழகம் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது.

             இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக, கடல் வணிகம் உள்ளது. அயல்நாட்டு கப்பல் நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர், இந்தியர்கள். கப்பல் படிப்புக்கு, தனிச் சிறப்பு உண்டு. கப்பல் படிப்பில், கடின உழைப்பை செலுத்தினால், அதிக சம்பளம் பெறலாம். சர்வதேச அளவில், கப்பல் வணிகத்தில், சிறப்பாக செயல்படும் முதல், 20 நாடுகளில், இந்தியாவும் ஒன்று.

           இந்தியாவில், கப்பல் படிப்புக்கான தேர்வு, அரசால் நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெற்றால், உலகில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம். கப்பல் கடலில் இருக்கும் போது, பெறும் வருமானத்திற்கு, வருமான வரி கிடையாது. அரசு நிறுவனத்தில் கப்பல் படிப்பில், பெண்கள் சேர்ந்தால், அவர்கள் பாதி கட்டணம் செலுத்தினால் போதும்.

           சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்நுட்பம், கப்பல் படிப்பில் மட்டும் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

 அனிமேஷன் துறையில் இந்தியாவுக்கு 2ம் இடம்: 

             அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறையின் வாய்ப்பு குறித்து, வல்லுநர் வரன் பேசியதாவது: அனிமேஷன் என்றால் சினிமா சார்ந்தது என, பலர் நினைக்கின்றனர். இது, தவறு. பன்முக துறைகளில், அனிமேஷன் வளர்ச்சிகண்டு வருகிறது. தற்போது, பள்ளி, கல்லூரி கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கானொலி காட்சி மூலம் பாடம் சொல்லி கொடுக்கப்படுகிறது.

              சென்ற நிதியாண்டில், அனிமேஷன் துறை, 18 சதவீதம் வளர்ச்சிகண்டுள்ளது. உலகில், அதிக அனிமேஷன் நிறுவனங்களை கொண்ட பட்டியில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில், இந்தியா உள்ளது. நம் நாட்டின் அனிமேஷன் துறையில், செலவு குறைவாகவும், தரமாகவும் உள்ளதால், ஹாலிவுட் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அன்னிய நிறுவனங்கள் அவற்றின், நேரடி கிளைகளை இந்தியாவில் திறக்கின்றன.

              அனிமேஷன் துறையை பொருத்தவரை மதிப்பெண் அவசியமல்ல. படைப்பாற்றல், சிந்திக்கும் திறன் மட்டும் இருந்தால் போதும், இதில் சாதிக்கலாம்.

No comments:

Post a Comment